This Article is From Jul 18, 2020

கந்த சஷ்டி விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்வி!

உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!?

கந்த சஷ்டி விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்வி!

கந்த சஷ்டி விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்வி!

ஹைலைட்ஸ்

  • மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்வி!
  • தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!?
  • அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும் தொடர்பு என சந்தேகம் எழுப்பப்படுவதாலா

கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். 

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் எனும் யூ டியூப் சேனல் மீது பாஜக தரப்பில், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வந்த விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய கந்த சஷ்டி கவசம் தொடர்பான வீடியோவில் பேசிய சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தேர்தல் வரும்போது மட்டும் தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்கு வரும் போலும்.

கோவில் கோவிலாக படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும். அரசின் சார்பில், தமிழர் கடவுள் முருகரை அருவருப்பாக நிந்தித்தவர் மீது கைது உட்பட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின், உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!?

இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகங்கள் எழுப்பப்படுவதாலா!? அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா!? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

.