This Article is From Feb 18, 2019

‘அறியாமையில் புலம்பும் கமல்’ - ஆதாரத்துடன் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் என நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

‘அறியாமையில் புலம்பும் கமல்’ - ஆதாரத்துடன் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 

இந்த ஒரு வருடத்தில் எதை எதை செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். அரசியலில் என்ன செய்யக்கூடாது என்பதை எனக்கு முன்பாக அரசியலில் உள்ளவர்கள் கற்றுக்கொடுத்தனர். பொதுஅறிவு கூட இல்லாதவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.

கிராம சபைக் கூட்டம் என்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா. நேற்று வந்த பையனைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா? நான் சட்டசபையில் சட்டைய பிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன். அப்படி கிழிஞ்சு போனாலும் வேற சட்ட மாத்திக்கிட்டு வெளில வருவேன். 

கூட்டணி என்னும் கறுப்புக் குட்டைக்குள் எனது புது காலணியை அழுக்காக்க விரும்பவில்லை கட்சியைத் தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்வது முறையல்ல. மேலும், திமுகவை கடுமையாக விமர்சிக்க, திமுகவே காரணம், மறைமுகமாக அல்ல நேரடியாக விமர்சிப்பேன். கூட்டணியில் இடம்பெற முடியாத தால் திமுகவை விமர்சிக்க வில்லை என்று அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டே திமுக கிராமசபைக் கூட்டங்களை நடத்தியதாக புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் என்று கூறியுள்ளார்.

.