This Article is From Nov 09, 2019

ரஜினி அரசியலில் இருந்திருந்தால் வெற்றிடத்தை நிரப்பியது தெரிந்திருக்கும்: துரைமுருகன் பதிலடி!

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன என துரைமுருகன் கூறியுள்ளார்.

ரஜினி அரசியலில் இருந்திருந்தால் வெற்றிடத்தை நிரப்பியது தெரிந்திருக்கும்: துரைமுருகன் பதிலடி!

தமிழகத்தின் தட்பவெப்ப அரசியல் குறித்து ரஜினிக்கு தெரியவில்லை - துரைமுருகன்

அரசியலில் இருந்திருந்தால் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பியது தெரிந்திருக்கும் என ரஜினிகாந்திற்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னதாக, இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், திருவள்ளூவர் அவர் ஞானி, சித்தர். ஞானி, சித்தர்களை எந்த மதம், ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது. திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். அதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. அவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். 

பாஜக அவர்களது ட்வீட்டரில் காவி உடையுடன் வள்ளுவர் படத்தை வெளியிட்டது, அவர்களது விருப்பம். நாட்டில் இவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அதை, இவ்வளவு சர்ச்சையாக்கியது சில்லியாக இருக்கிறது.

என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். ஆனால் நானும் சிக்கமாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்டார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் தனது வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்தி விட்டன என்றும், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து கூறும்போது, வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்; தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன. 

தமிழகத்தின் தட்பவெப்ப அரசியல் குறித்து ரஜினிக்கு தெரியவில்லை. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்று அவர் கூறினார்.

.