This Article is From Oct 12, 2018

குட்கா ஊழல்: அமலாக்கத் துறை துணை இயக்குநரிடம் சிபிஐ விசாரணை!

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது

குட்கா ஊழல்: அமலாக்கத் துறை துணை இயக்குநரிடம் சிபிஐ விசாரணை!

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ, தமிழக அரசின் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என்று தனது விசாரணையை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பல்வேறு அரசு துறை அதிகாரிகளிடம் சிபிஐ தரப்பினர் விசாரணை நடத்தினார்கள்.

அமலாக்கத் துறை துணை இயக்குநர் ஷியோரனிடம் சிபிஐ, விசாரணை நடத்தியுள்ளது. அதே நேரத்தில் அவர் மேல் குற்றச்சாட்டு இருப்பதால் விசாரணை நடத்தப்பட்டதா, அல்லது, சாட்சியாக கருதி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. குட்கா ஊழல் நடந்த போது, ஷியோரன், சென்னையில் மத்திய கலால் துறை உதவி இயக்குநராக இருந்தார். அதனால் தான் அவரிடம் சிபிஐ, விசாரணை நடத்தியுள்ளது.

இது மட்டுமல்லாமல், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி, ஜெயக்குமாரிடமும் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியுள்ளது. குட்கா ஊழல் நடந்த போது, ஜெயக்குமார், மத்திய க்ரைம் பிரிவின் துணை கமிஷனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் தரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிபிஐ இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தத் தொடங்கியது. சில வாரங்களுக்கு முன்னர் சிபிஐ, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது. தொடர்ந்து சிபிஐ பல்வேறு தரப்பினரிடம் விசாரணை செய்து வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, வருமான வரித் துறையினர், குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவ் அலுவலகத்தில் சோதனையிட்டு அவரின் டைரியை கைப்பற்றிய போது, அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த டைரி கிடைத்ததை அடுத்து தான் குட்கா விவகாரம் பூதாகரமானது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.