This Article is From Aug 05, 2020

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை: அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

இதில், பங்கேற்க இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை: அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

New Delhi:

அயோத்தியின் ராம்ஜென்ம பூமியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என பல தசாப்தங்களாக பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதற்கான பூமி பூஜை விழா நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

இதற்காக கோவில் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊதா மற்றும் பச்சை நிறத்தில் ஒளிருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு விழாவில் பங்கேற்க ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், பங்கேற்க இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல், விழாவில் பங்கேற்க இருந்த மதகுரு ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் லக்னோவுக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி செல்கிறார். முதலில் அங்கு அனுமன்ஹார்கி கோவிலுக்கு செல்லும் அவர், அங்கு தரிசனத்தை முடித்து விட்டு, அங்கிருந்து ராம் லல்லாவுக்கு செல்கிறார். 

தொடர்ந்து, விழாவின் மையமாக ராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கால் நாட்டுகிறார். ராமர் கோயிலின் வடிவமைப்பு நேற்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. அதில், கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக கோயில் உள்ளது. கோயிலின் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும், இது முதலில் திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பெரிதாக இருக்கும் என அதன் கட்டிடக் கலைஞர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவாத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விஐபிக்கள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். பல தசாப்தங்களாக பழமையான கோயில்-மசூதி தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த, இக்பால் அன்சாரிக்கு, முதல் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த கோவில் விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த அமைச்சர் உமா பாரதி, அயோத்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்து கவலை எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் மோடி குறித்து கவலை எழுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அயோத்தி பூமி பூஜையில் கலந்துகொள்வதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பூமி பூஜை நடக்கும் சமயத்தில், அவர் வேறு இடத்தில் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவில் இயக்கத்திற்கு ஆதரவளித்திருந்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடனான 35 ஆண்டுகால கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது. 

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

.