அனைத்து மட்டத்திலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார் பவன் கல்யாண்.
Hyderabad: தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சி 2024 சட்டமன்ற தேர்தலையொட்டி ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என அறிவித்துள்ளார். இந்த கூட்டணி ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாஜகவின் ஆந்திர மாநில பொறுப்பாளர் சுனில் தியோதர் கூறியதாவது-
சாதிய அரசியலை முடிவுக்கு கொண்டு வர, அதிகாரத்துவ அரசியல் ஆந்திராவில் நிலவும் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம். ஜெகன் மோகன் ரெட்டி அரசை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்து விட்டார். இதையேதான் சந்திர பாபு நாயுடுவும் செய்திருந்தார். இனிமேல் சந்திரபாபு நாயுடு அல்லது ஜெகன் மோகன் ரெட்டியுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
பவன் கல்யாண் முழு மனதுடன் பாஜகவுடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறார். 2014-ல் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் அவர் போட்டியிடவில்லை. 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, எங்களுக்கு பகுதியளவு ஆதரவு தந்தார். இன்றைக்கு அவர் 2024-ல் ஆந்திராவில் ஆட்சியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.
2014-க்கும் பின்னர் எங்களுக்கும் பவன் கல்யாணுக்கும் இடையே சிறிய பிளவு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆந்திராவின் நலனைக் கருதி நான் உயர் மட்டத்திலுள்ள பாஜக தலைவர்களை சந்தித்து பேசினேன். இதன் முடிவில் பாஜகவும் ஜனசேனாவும் சேர்ந்து பணியாற்றுவது என்பதாக முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு சுனில் தியோதர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பவன் கல்யாண் கூறியதாவது –
சட்டமன்ற தேர்தலின்போது அமராவதியை ஆந்திராவின் தலைநகராக ஏற்றுக் கொள்கிறேன் என்ற ஜெகன் மோகன் சொன்னார். அதுபோன்ற பிரமாண்டமான நகரத்தை குறுகிய கால கட்டத்தில் ஏற்படுத்த முடியாது என்பது என்னுடைய கருத்து. ஆளுங்கட்சி மாறினால் ஆந்திர தலைநகர் பிரச்னை தீர்க்க முடியாது என்று கூறினேன். நான் அச்சப்பட்டது நடந்து விட்டது.
இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.
பாஜகவின் மாநில தலைவர் கன்னா லட்சுமி நாராயணா கூறுகையில், அமராவதி என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி செயல்படுத்தப்படுகிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ளோம் என்ற ஒரே காரணத்திற்காக பல தலைநகரங்களை ஏற்படுத்தும் திட்டத்தை ஜெகன் மோகன் செயல்படுத்த முடியாது என்றார்.
பாஜக மற்றும் ஜனசேனா தரப்பில் ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்படவுள்ளது. அது விரைவில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்கும்.
இந்த சந்திப்பின்போது ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், நாதெந்தளா மனோகர், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம் மோகன் உள்ளிட்டோர் ஜன சேனா தரப்பில் பங்கேற்றனர். பாஜக தரப்பில் கட்சியின் மாநில தலைவர், கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் சுனில் தியோதர், ஜிவிஎல் நரசிம்ம ராவ், புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜகவுடன் எந்தவித நிபந்தனையும் இன்றி பணியாற்றுவதற்கு பவன் கல்யாண் சம்மதம் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத முடிவுகளை எடுத்து வருவதாக ஜெகன் மோகன் அரசு மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக பவன் கல்யாண் குறித்து கருத்து தெரிவித்திருந்த அமித் ஷா, நரசிம்ம ராவ் ஆகியோர், பவன் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் அவர் தேசிய அளவில் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் கூறியிருந்தனர். ஆனால் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இரு கட்சிகளும் நிபந்தனையின்றி கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
ஜனசேனா, பாஜக ஆகியவை நிபந்தனையின்றி கூட்டணி அமைத்துள்ளது குறித்து ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ‘ஆந்திராவுக்கு கெட்டுப்போன லட்டுகளை பிரதமர் மோடி கொடுத்துள்ளார் என்று பவன் கல்யாண் விமர்சித்திருந்தார். இப்போது ஏன் அவர் மாறினார்?' என்று அக்கட்சியின் அம்பதி ராம்பாபு கிண்டல் செய்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யாண், அந்த சட்டம் இந்திய முஸ்லிம்களை பாதிப்பதுபோல் தெரியவில்லை என்று கூறினார்.
பவன் கல்யாணின் ஜன சேனா ஆந்திர தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2019 சட்டமன்ற தேர்தலில் ஜனசேனாவுக்கு 7 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளும், பாஜகவுக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளும் கிடைத்தன.