This Article is From Jul 01, 2019

கிரண்பேடியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு… பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக!

'கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்'

கிரண்பேடியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு… பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக!

முன்னதாக கிரண்பேடி, புதுச்சேரி பத்திரிகையாளர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுவில் தமிழக தண்ணீர் பிர்சனை குறித்து கருத்து கூறியுள்ளதாக பல செய்தி நிறுவனங்களும் தகவல் தெரிவித்தன. 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், தற்போது நடந்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்தது. இன்று மீண்டும் கூடிய சட்டப்பேரவையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேச அனுமதி கோரியுள்ளார். அவருக்கு அனுமதி மறுக்கப்படவே, அவர் தலைமையில் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த ஸ்டாலின், “புதுவை ஆளுநர் கிரண் பேடி, தான் ஒரு ஆளுநர் என்பதையே மறந்துவிட்டு, தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துகளை இன்றை செய்தித் தாள்கள் அச்சிட்டுள்ளன.

அவர், ‘சென்னையில் தண்ணீர் பிரச்னை வர யார் காரணம். மிகவும் மோசமான அரசு நிர்வாகம், ஊழல் படிந்த அரசியல் மற்றும் ஒற்றுமை இல்லாம நிர்வாக மட்டம், துணிவற்ற மக்கள் ஆகியவையே காரணம்' என்றுள்ளார். இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பேச நான் பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் வெளிநடப்பு செய்தோம். 

கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அது குறித்து ஆளுங்கட்சிக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் பேசியதைத் தொடர்ந்து பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘கிரண் பேடி மீது ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அவர் கூறியதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தமிழக அரசியல் சூழல் குறித்து பேச தகுதியில்லை' என்று பதில் அளிக்கிறார்” என்று கூறினார். 

முன்னதாக கிரண்பேடி, புதுச்சேரி பத்திரிகையாளர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுவில் தமிழக தண்ணீர் பிர்சனை குறித்து கருத்து கூறியுள்ளதாக பல செய்தி நிறுவனங்களும் தகவல் தெரிவித்தன.

.