This Article is From Feb 07, 2020

“என் பையன்ட்ட மன்னிப்பு கேள்; இல்லைனா…!”- திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக சீறும் சிறுவனின் தாய்

Dindugal Seenivasan Controversy: “என் மகனிடம் அமைச்சர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்"

“என் பையன்ட்ட மன்னிப்பு கேள்; இல்லைனா…!”- திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக சீறும் சிறுவனின் தாய்

Dindigal Seenivasan Controversy: "சிறுவனை எனது பேரனாக எண்ணித்தான் செருப்பைக் கழற்றுமாறுக் கேட்டுக்கொண்டேன்"

Dindigal Seenivasan Controversy: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தெப்பக்காட்டில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இதனை தொடங்கி வைப்பதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் தெப்பக்காட்டிற்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பழங்குடியின சிறுவன் ஒருவரை அழைத்து, அவரை தனது செருப்பை கழட்டுமாறு கேட்டார் அமைச்சர். அந்த சிறுவனும் வேறு வழியின்றி அமைச்சர் காலில் இருந்த செருப்பை கழற்றினார். இந்த சம்பவம் ஏராளமானோருக்கு மத்தியில் நடந்தது. 

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கண்டித்துள்ளன. அமைச்சர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். சிறுவன் தரப்பிலும் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் அமைச்சர் சீனிவாசன், “முதுமலையில் ஷூ அணிந்திருந்தேன். அதன் கொக்கிகளைக் கழற்ற வேண்டும். சுற்றியிருந்தவர்கள் பெரியவர்களாக இருந்தார்கள். அங்கே 2 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். என் பேரனைப் போன்று இருந்தார்கள். அவர்களில் ஒருவரை செருப்பை கழற்றி விடச் சொன்னேன். சிறுவனை எனது பேரனாக எண்ணித்தான் செருப்பைக் கழற்றுமாறுக் கேட்டுக்கொண்டேன். இதில் எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது” என்று கூறியுள்ளார். 

அமைச்சர் மன்னிப்பு கேட்ட பின்னரும், சிறுவனின் தாயார் காளி, “என் மகனிடம் அமைச்சர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை இந்த விவகாரத்தை நான் விடப் போவது கிடையாது. போராட்டத்தில் குதிப்பேன். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்தப் பிரச்னையிலிருந்து பின்வாங்குவேன்,” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

.