This Article is From Jul 21, 2020

N-95 முகக் கவசங்களைப் பயன்படுத்துகிறீர்களா..? - அரசு விடுக்கும் எச்சரிக்கை!

மத்திய சுகாதாரத் துறையின் பொது சுகாதார சேவைகளுக்கான இயக்குநர், இது குறித்து, மாநில சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

N-95 முகக் கவசங்களைப் பயன்படுத்துகிறீர்களா..? - அரசு விடுக்கும் எச்சரிக்கை!

கடந்த ஏப்ரல் மாதம், மத்திய அரசு, வீட்டிலேயே செய்யப்படும் முகக் கவசங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஹைலைட்ஸ்

  • N-95 மாஸ்க் பொது மக்களால் பயன்படுத்தப்படுகிறது
  • வால்வ் மாஸ்க்குகள் பற்றி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
  • சுகாதாரத் துறைகளுக்கு இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பொது வெளியில் அனைவரும் மாஸ்க் அல்லது முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதில் வால்வ் வைத்த N-95 ரக மாஸ்க்குகள் பொது மக்கள் பலரால் பயன்படுத்துப்படுகிறது. இந்த முகக் கவசங்கள் தொற்றுப் பரவலைத் தடுப்பதில்லை என்று தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு. 

மத்திய சுகாதாரத் துறையின் பொது சுகாதார சேவைகளுக்கான இயக்குநர், இது குறித்து, மாநில சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில் அவர், “வால்வ் வைத்து பயன்படுத்தப்படும் N-95 மாஸ்க்குகள், கொரோனா தொற்றுப் பரவல் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துகிறது. காரணம், இந்த மாஸ்க் உள்ளே இருந்து வரும் தொற்றுப் பரவல் தடுக்கப்படுவதில்லை. எனவே, இந்த பாதிப்பைக் கருத்தில் கொண்டு N-95 முகக் கவசங்கள் தவறாக பயன்படுத்துப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், மத்திய அரசு, வீட்டிலேயே செய்யப்படும் முகக் கவசங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. குறிப்பாக மக்கள் பொது வெளிக்கு வரும்போது முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதேபோல இந்த முகக் கவசங்களை தினமும் துவைக்க வேண்டும் என்றும், பருத்தியாலான துணியில் முகக் கவசம் செய்தால் நல்லது என்றும் அறிவுரை வழங்கியது அரசுத் தரப்பு. 

இந்த முகக் கவசமானது, எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அதே நேரத்தில் 5 நிமிடமாவது கொதிக்கும் நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. நீரில் உப்பு சேர்த்து அலசினால் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவுரையில், “எப்போதும் உங்கள் முகக் கவசங்களை இன்னொரு நபருடன் பகிர்ந்து  கொள்ளாதீர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனித் தனி முகக் கவசங்களைப் பயன்படுத்துங்கள். முகக் கவசங்களைப் பயன்படுத்தும் முன் கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். முகக் கவசம் ஈரமானால் புதிதான ஒன்றைப் பயன்படுத்துங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11,55,191ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 28,084 ஆக அதிகரித்துள்ளது. 


 

.