This Article is From Apr 15, 2020

“எப்போதையும்விட இப்போதுதான் நமக்கு WHO தேவை!”- டிரம்பை எதிர்க்கும் பில் கேட்ஸ்!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது, அமெரிக்கா மாறியுள்ளது.

“எப்போதையும்விட இப்போதுதான் நமக்கு WHO தேவை!”- டிரம்பை எதிர்க்கும் பில் கேட்ஸ்!!

உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1,25,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சீனாவுக்கு ஆதரவாக WHO செயல்படுகிறது: டிரம்ப்
  • WHO-க்கு அமெரிக்கா அளித்து வரும் நிதி நிறுத்தப்படுகிறது
  • WHO,கொரோனா விவகாரத்தில் நடந்து கொண்டது பற்றி விசாரணை செய்யப்படும்:டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பான WHO கொரோனா விவகாரத்தில் பல விஷயங்களை மூடி மறைத்ததாகக் கூறி, அதற்கு தங்கள் அரசு அளித்து வரும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் மைக்ரோசாஃப்ட்டின் நிறுவனர் மற்றும் பில்லியனரான பில் கேட்ஸ். 

வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் சுகாதார அவசர நிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது என்றும், கொரோனா வைரஸ் பரவலை தவறாக நிர்வகித்த உலக சுகாதார அமைப்பின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், “கொரோனா வைரஸ் பரவல் குறித்த தவறான தகவலையும், அதை தடுப்பது குறித்து சரியான நடவடிக்கைகளை கையாளத் தெரியாமல் இருந்ததால் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா சார்பில் வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன். உலக சுகாதார அமைப்பில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என அனைவருக்கும் தெரியும்.

உலக சுகாதார அமைப்பு நடுநிலையாக செயல்பட்டு அனைத்து நாடுகளுக்கும் ஆலோசனை தெரிவிக்க வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது” என்று அவர் குற்றம்சாட்டினார். 

இது குறித்து பில் கேட்ஸ், “உலகளவில் ஒரு சுகாதார அவசரநிலை நிலவும் போது, உலக சுகாதார அமைப்பிற்கு நிதியை நிறுத்துவது என்பது மிக ஆபத்தானது. அவர்கள் செய்யும் பணியால்தான் கொரோனா வைரஸ் பரவல் மெதுவாக உள்ளது. அவர்களின் பணிகளை நிறுத்தினால் வேறு எந்த அமைப்பாலும் அவர்கள் செய்ததை செய்ய முடியாது. இந்த உலகத்திற்கு, உலக சுகாதார அமைப்பின் தேவை எப்போதையுவிட இப்போது அதிகமாக இருக்கிறது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது, அமெரிக்கா மாறியுள்ளது. உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1,25,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகளவில் வேறெங்கும் இல்லாத அளவு அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,407 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 26,047 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,13,886 ஆக அதிகரித்துள்ளது.

(With AFP inputs)

.