This Article is From Jan 10, 2020

மோடி, அமித் ஷாவுக்கு எதிரான சர்ச்சை பேச்சு! நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!!

நெல்லை கண்ணன் கைது குறித்து சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கண்ணனை கைது செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், வரம்பு மீறி பேசியதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மோடி, அமித் ஷாவுக்கு எதிரான சர்ச்சை பேச்சு! நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!!

நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில், தமிழறிஞர் நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 


அவர் பேச்சைத் தொடர்ந்து பாஜகவினர் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். அவரது பேச்சுக்கு அரசியல் தளத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்தன. 
பொதுக் கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், “எனக்கு மோடி மீது எந்த கோபமும் இல்லை. அவர் முட்டாள். அமித்ஷாதான் மத்திய அரசின் மூளையாக செயல்பட்டு வருகிறார். அவரை நீங்கள் சோலிய முடிப்பீர்கள் என்று நினைக்கிறேன்…” என எல்லோரையும் ஒருமையிலேயே பேசினார். தொடர்ந்து அவர் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசினார். அந்தக் கூட்டத்தில் பெருந்திரளான முஸ்லிம்கள் பங்கேற்றிருந்தனர்.

நெல்லை கண்ணனுக்கு எதிராக பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது நெல்லை மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன்பின்னர் கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்ச்சியாக திருச்சி அருகே அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.

இதற்கிடையே தனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி கண்ணன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற அமர்வு, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக நெல்லை கண்ணன் கைது குறித்து சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கண்ணனை கைது செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், வரம்பு மீறி பேசியதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 
 

.