This Article is From Dec 06, 2019

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் திங்களன்று தாக்கல் செய்யப்படுகிறது!!

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் அங்கு மசோதா எளிதில் நிறைவேற்றப்படும். இருப்பினும் மாநிலங்களவையில் மெஜாரிட்டி இல்லாததால் அங்கு மசோதா நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும்.

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் திங்களன்று தாக்கல் செய்யப்படுகிறது!!

மதசார்பற்ற தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் குடியுரிமை திருத்த மசோதா உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

New Delhi:

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா திங்களன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசேதா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு, அவர்கள் அந்த நாடுகளில் துன்புறுத்தப்பட்டிருந்தால் இந்தியாவில் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் அங்கு மசோதா எளிதில் நிறைவேற்றப்படும். இருப்பினும் மாநிலங்களவையில் மெஜாரிட்டி இல்லாததால் அங்கு மசோதா நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும். இந்த விவகாரத்தில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவை முன்னரே இருந்த பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டம் காரணமாக மசோதா அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா குறித்து வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள், சமூக அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிடோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். 

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த ஆண்டு பல்வேறு போராட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்றன. இதற்கு எதிராக பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளே குரல் எழுப்பின. இவற்றை அடிப்படையாக கொண்டு முன்னெச்சரிக்கையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வடகிழக்கு மாநில தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நடப்பாண்டின் தொடக்கத்தின்போதும் மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் நடந்தன. இந்த விவகாரத்தில் அசாம் கன பரிஷத் மத்திய அரசுடன் முரண்பாட்டில் உள்ளது. இருப்பினும் அதற்கு முன்பாக மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டன. 

குடியுரிமை திருத்த மசோதா முஸ்லிம்களை தவிர்த்துள்ளதால் மத சார்பற்ற தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என்றும், அரசியலமைப்பு சட்டம் வகுத்த சமத்துவத்தை பாதிக்கும் என்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

அசாம், மேகாலயா, சிக்கிம், அருணாசல பிரதேசம், மிசோரம், நாகலாந்தை சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதில் மசோதா நிறைவேற்றப்பட்டால் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் மலைவாழ் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என்று தெரிவித்துள்னர். 

1955-ல் ஏற்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக தற்போது மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த சமயத்தி பின்பற்றுவோர், பார்சிகள், ஜெயின் ஆகியோர் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை திருத்த இந்த மசோதா வகை செய்கிறது. 

.