This Article is From Dec 06, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவ வேண்டும் - அமிதாப் பச்சன் உருக்கம்

கஜா புயல் நிவாரணத்திற்கு பிற மாநிலத்தவர்கள் உதவ வேண்டும் என்று கூறி பிரபல நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவ வேண்டும் - அமிதாப் பச்சன் உருக்கம்

கஜா புயல் நிவாரணத்திற்கு பிரபலங்கள் பலர் உதவி செய்து வரும் நிலையில், பிற மாநில மக்கள் தமிழகத்திற்கு உதவ வேண்டும் என்று நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் தரப்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கில் மரங்கள் சாய்ந்ததுடன், மின் கம்பங்களும் சரிந்துள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்களில் மக்கள் நூற்றுக்கணக்கில் வசித்து வருகின்றனர். அவர்களின் துயரை துடைக்க தமிழக அரசு, அரசியல் கட்சிகள், பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பல தரப்பில் இருந்து உதவி அளிக்கப்படுகிறது. இதற்கிடையே நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கேரள அரசிற்கு கடிதம் எழுதி உதவி கேட்டார். இதையடுத்து கேரள அரசு சார்பாக ரூ. 10 கோடி நிவாரண உதவியாக அளிக்கப்பட்டது.

 

 

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு பிற மாநில மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று பிரபல நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் தனது வீடியோவில், '' லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரும் எண்ணிக்கையில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. பல ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிவாரண பணிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. நாம் அனைவரும் இந்தியர்கள். நம்மில் பலருக்கு கஜா புயலால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், இந்த கணம் என்பது பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக நமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நேரம். நம் சொந்த மக்களுக்கு நாம் உதவி செய்ய முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அமிதாப்பின் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், அமிதாபுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கமல் தனது பதிவில், ''அமித் ஜி-க்கு நன்றி. கஜா புயலால் தமிழ்நாடு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் தெளிவாக கூறியுள்ளீர்கள்.

நம்மிடையே பல வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவற்றை இந்தியர்கள் என்று ஒன்றிணைக்கும் நூலாக உங்களைப் போன்றவர்கள் உள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கம8லின் பதிவை ஏராளமான லைக், ஷேர் செய்து வருகின்றனர்.

.