This Article is From Jan 17, 2019

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி நிறைவு: சிறந்த வீரருக்கு கார் பரிசு

மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்று வட்டாரங்களில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி நிறைவு: சிறந்த வீரருக்கு கார் பரிசு

மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்று வட்டாரங்களில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிக கெடுபிடியுடன் செய்யப்பட்டதால், எந்த வித அசம்பாவிதங்களும் இல்லாமல் முழு நாள் ஜல்லிக்கட்டுப் போட்டியும் சுமூகமாக நடந்து முடிந்தது. அதைப் போல நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியும் எந்த விதப் பிரச்னைகளுமின்றி நடந்து முடிந்தது.

இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனியசாமி கோயில் திடலில் இன்று காலை மணியளவில் கோலாகலமாக துவங்கியது. இதில், தமிழகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் காளைகளை ஜல்லிக்கட்டில் களம் இறக்கியுள்ளனர். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விஐபி-க்கள் காளைகள் போக்கு காட்டின.

குறிப்பாக டிடிவி தினகரனின் காளை, இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, சசிகலாவின் காளை, அதிமுக, திமுக பிரபலங்கள் சிலரின் காளைகள் போட்டியில் இடம்பெற்றன. டிடிவி தினகரனின் காளை மீது ரூ. 5 ஆயிரம் ரொக்கம் அறிவிக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளிவந்த காளை இளைஞர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றது. மிரண்டுபோன இளைஞர்களால் காளையை நெருங்கவில்லை.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வின் காளை பிடிபட்டுச் சென்றது. சசிகலாவின் காளை கருப்பு நிறத்தில் இருந்தது. வாடிவாசலில் இருந்தே துள்ளிய காளை, யாரிடமும் பிடிபடாமல் சென்று விட்டது. இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தம்பியின் காளை உள்ளிட்டவையும் போக்கு காட்டி விட்டுச் சென்றன. 9 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள், 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து மாலை 4.45 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது.

சிறந்த காளையாக பரம்பப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை தேர்வு செய்யப்பட்டு, கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. இதே போல் 10 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவருக்கு 2வது பரிசும், 9 காளைகளை பிடித்த அஜய் என்பவருக்கு 3வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.