ராகுல் காந்தி ராஜினாமாவை திரும்ப பெற மாட்டோம் என்று பலர் கூறினர்.
New Delhi: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை பதவியில் நீடிக்கக்கோரி சமாதானம் செய்ய முயன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். டெல்லி மற்றும் தெலுங்கானாவில் இருந்து கட்சியின் செயல் தலைவர்கள் இருவரும், பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கியுள்ளனர்.
இதேபோல், நாடு முழுவதும் ஏறத்தாழ 120 நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கியுள்ளனர். கட்சியைப் புதுப்பித்து பலப்படுத்துவதில் ராகுலுக்கு எந்த சிரமமும் இருக்ககூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியையடுத்து கடும் அதிருப்தியில் இருந்த ராகுல், மாநில காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தோல்விக்கு பொறுப்பேற்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஹரியாணாவில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், மற்றவர்களை ராஜினாமா செய்ய தான் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வது அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்றும் கூறியிருந்தார்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரான விவேக் டன்கா கட்சியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் குழுவின் பொறுப்பிலிருந்து விலகினார். கட்சியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி புத்துணர்வான வலிமையுடன் மீட்கும்படி அவர் ராகுலிடம் வேண்டியிருந்தார்.
மேலும் அவர் தன் முடிவைப் பின்பற்றி மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் பதவி விலக வேண்டும் எனவும் கோரியிருந்தார்.