This Article is From Nov 03, 2018

ஃப்ளோரிடா மாகாண யோகா அரங்கில் மர்ம நபர் துப்பாக்கிசூடு..!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் தலைநகரமான தாலாஹாசியில் உள்ள யோகா அரங்கு ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்

ஃப்ளோரிடா மாகாண யோகா அரங்கில் மர்ம நபர் துப்பாக்கிசூடு..!

இந்த துப்பாக்கிசூட்டில் ஒரேயொரு நபர் மட்டும் தான் ஈடுபட்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Tallahassee:

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் தலைநகரமான தாலாஹாசியில் உள்ள யோகா அரங்கு ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட நபரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தாலாஹாசி போலீஸ் அதிகாரி மைக்கெல் டீலியோ, ‘எங்களுக்கு மாலை 5:47 மணி அளவில், யோகா ஸ்டூடியோ ஒன்றில் துப்பாக்கிசூடு நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு எங்கள் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். அப்போது, பலர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் தரையில் கிடந்தனர். 

உடனடியாக காயமடைந்த 5 பேரை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அதில் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டனர். சம்பவம் நடந்த போது, துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட மர்ம நபருக்கு எதிராக பலர் போராடியுள்ளது தெரிய வந்துள்ளது. பலர் மற்றவர்களையும் காக்க முற்பட்டுளனர். 

இந்த துப்பாக்கிசூட்டில் ஒரேயொரு நபர் மட்டும் தான் ஈடுபட்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்று கூறியுள்ளார். 

தாலாஹாசி நகரத்தின் மேயர் ஆண்ட்ரு ஜில்லியம், ‘இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவுடன், விரைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாரைப் பாராட்டுகிறேன். வன்முறையில் ஈடுபடும் யாரையும் சும்மா விட முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். 


 

.