This Article is From Jul 10, 2020

உ.பி ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டர்: போலீஸ் அளிக்கும் விளக்கமும், எழும் 5 கேள்விகளும்!

நேற்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஒரு கோயிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • என்கவுன்ட்டர் சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளன
  • சம்பவ இடத்தில் இருந்தவர்களின் வாக்குமூலம் சந்தேகத்தைக் கூட்டுகிறது
  • இன்று காலை 7 மணி அளவில் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது
Kanpur:

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது சாலை விபத்தில் அவர் சென்ற கார் சிக்கியது என்றும், பின்னர் அங்கிருந்து அவர் தப்ப முயன்றபோது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

உத்தர பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட 8 காவலர்களைக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் விகாஸ் துபேதான் இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து துபேவைக் கைது செய்ய முயன்றபோது, அவர் பல இடங்களுக்குத் தப்பிச் சென்றார். 

இந்நிலையில் நேற்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஒரு கோயிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். அவரை இன்று அதிகாலை உத்தர பிரதேசம் அழைத்து வர முற்பட்டபோதுதான், என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது.

என்கவுன்ட்டர் சம்பவத்தில் எழும் சந்தேகங்கள்:

-இன்று அதிகாலை 4 மணிக்கு உத்தர பிரதேசத்தின் சுங்கச் சாவடி ஒன்றில், விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற போலீஸ் கார் தென்பட்டுள்ளது. மூன்று கார்களில் போலீஸ் பாதுகாப்புடன் அவர் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் வேறு ஒரு காரில் இருந்தார் என்றும், என்கவுன்ட்டர் சமயத்தில் விபத்துக்கு உள்ளானது இன்னொரு கார் என்றும் கூறப்படுகிறது. இந்த கார் மாற்றம் செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன?

-போலீஸ் வாகனங்களைப் பின் தொடர்ந்து சென்றன ஊடகத்தினர் வாகனங்கள். ஆனால், என்கவுன்ட்டர் சம்பவம் நடந்த 2 கிலோ மீட்டருக்கு முன்னரே பத்திரிகையாளர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இது எதனால்?

-சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள், தோட்டா சத்தம் கேட்டதாக சொல்கின்றனர். ஆனால், விபத்து நடந்ததற்கான எந்த சத்தமும் கேட்கவில்லை என்கின்றனர். 

-60 கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை ஏன் விலங்கு போடாமல் அழைத்து வந்தது போலீஸ்? 

-சாலையில் தடுப்புகள் இல்லாத இடத்தில்தான் கார் விபத்து நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அருகிலிருந்த இடத்தில் இறங்கி விகாஸ் துபே, தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இதுவும் சந்தேகத்தை எழுப்புகிறது. 

இந்த என்கவுன்ட்டர் சம்பவம் பற்றி பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நேற்று, உச்ச நீதிமன்றத்திலும், விகாஸ் துபேவுக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 


 

.