This Article is From Jun 05, 2019

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,500 தேர்வு மையங்களில் கடுமையான கட்டுப்பாட்டுடன், கடந்த மே.5ஆம் தேதி நடைபெற்றது. இந்தமுறை நீட் தேர்வினை, 15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். 

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்தி 34 ஆயிரம் மாணவர்கள், இந்தாண்டு நீட் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்தி 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். 

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் காலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்பட்டது. 

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடத்தில் தமிழக மாணவர்கள் யாருமில்லை. அதேசமயம் தமிழக மாணவியான ஸ்ருதி அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்துள்ளார். 

இவர் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு 9.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளார். நீட் தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in, http://www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.


 

.