This Article is From Jun 05, 2020

உலக சுற்றுச்சூழல் தினம்: இந்த தாவரங்களுடன் உங்கள் வீட்டில் உள்ள காற்றை சுத்திகரிக்க உதவும்!

பல்லுயிரியலை நாம் அழிக்கும்போது, ​​மனித வாழ்க்கையை ஆதரிக்கும் அமைப்பை அழிக்கிறோம். இயற்கையின் நுட்பமான சமநிலையை சீர்குலைப்பதன் மூலம், கோரோனா உள்ளிட்ட நோய்க்கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகளை மனித சமூகம் உருவாக்கியுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம்: இந்த தாவரங்களுடன் உங்கள் வீட்டில் உள்ள காற்றை சுத்திகரிக்க உதவும்!

உங்கள் வீட்டிலுள்ள காற்றை சுத்திகரிக்க உட்புற தாவரங்கள் உதவும்

இவ்வுலகில் மனிதன் தனித்த ஓர் உயிரி அல்ல. பல கோடிக்கணக்கான உயிரினங்களில் மனிதனும் ஒருவன். ஆனால், சமூக விலங்காக பரிணமித்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாம் உலக சுற்றுச்சூழல் தினத்தினை இன்று அனுசரிக்கின்றோம். 1974 முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது. சூழலியலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அது எதிர் நோக்கியிருக்கும் சவால்கள் குறித்தும் சூழலியலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை பரப்புவது ஐக்கிய நாடுகளின் முதன்மை பணியாகும். நடப்பாண்டின் சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் பல்லுயிர் பாதுகாப்பாகும். இன்றைய தினம் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஐ.நா இது குறித்து விரிவாக தனது இணையதள பக்கங்களில் கட்டுரைகளை எழுதியுள்ளது.

பல்லுயிரியலை நாம் அழிக்கும்போது, ​​மனித வாழ்க்கையை ஆதரிக்கும் அமைப்பை அழிக்கிறோம். இயற்கையின் நுட்பமான சமநிலையை சீர்குலைப்பதன் மூலம், கோரோனா உள்ளிட்ட நோய்க்கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகளை மனித சமூகம் உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரேனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையின் காரணமாக காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) பி.எம் .2.5 அளவுகளில் 46 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த அளவுகள் டெல்லியில் எடுக்கப்பட்டவையாகும். சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்த நகரங்களில் டெல்லியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல வானங்கள் தங்கள் இயக்கத்தினை மீண்டும் துவங்கியுள்ளன. நாம் சுவாசிக்கும் காற்று தொடர்ந்து சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் சுத்தமான காற்றை சுவாசிப்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். அந்த வகையில் வீட்டில் காற்றை சுத்தப்படுத்த சில தாவரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மணி பிளான்ட்

மணி பிளான்ட் என்கிற குறுந்தாவரம் வகையை சேர்ந்த இந்த தாவரமானது பராமரிப்பதற்கு எளியதாக இருப்பதனாலும், சிறியதாக வளர்வதால் அதிக இடம் தேவையில்லை என்பதாலும் இந்த தாவரங்களை வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். பார்க்க அழகாக இருப்பதாலும், இரவில் ஆக்சிஜனை வெளியிடுவதாலும் இதை பொதுவாக அனைவரும் விரும்பி வளர்க்கின்றோம்.

அரக்கா பால்ம்

இது பாக்கு மரத்தையொட்டிய தோற்றத்தை கொண்ட குறுமரம் வகையை சாரந்த தாவரமாகும். இந்த தாவரம் ஃபார்மால்டிஹைட் மற்றும் பென்சீன் போன்ற நச்சு வாயுக்களை உறிஞ்சிக்கொள்கின்றது. இதந் தாவரம் வளர்வதற்கு பாதியளவு நிழல் இருந்தாலே போதும் என்பதால் அதிகமாக வீடுகளுக்குள் வளர்க்கப்படுகிறது. மேலும், இந்த தாவரம் சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல பலனை தரக்கூடியதாகும்.

ஜெர்பெரா:

இவ்வகை தாவரங்கள் செடிகள் வகையை சார்ந்ததாகும். இவை மிக பிரகாசமான பூக்களை தருவதால் பெரும்பாலானோர் இதனை விரும்பி வளர்க்கின்றனர். மேலும், இந்த தாவரம் சிறந்த காற்று சுத்திகரிப்பானாகும். விண்வெளி நிலையங்களில் காற்றை சுத்தம் செய்வதற்கான ஆராய்ச்சிக்காக நாசா இந்த தாவரத்தினை பயன்படுத்திவருகிறது.

பாம்பு கற்றாழை அல்லது மருள் கற்றாழை:

இந்த வகை செடிகள் பார்ப்பதற்கு பாம்பு போல நீளமாக வளர்வதால் ஆங்கிலத்தில் ஸ்நேக் பிளான்ட் என அழைக்கிறார்கள். ஃபார்மால்டிஹைட், நைட்ரஜன் ஆக்சைடு, பென்சீன் போன்ற நச்சுக்களை தன்னை சுற்றியுள்ள காற்றிலிருந்து அப்புறப்படுத்தும் தன்மைக்கொண்ட இவ்வகை தாவரங்கள் குறைந்த சூரிய ஒளியிலும் சிறப்பாக வளர்கின்றன.

துளசி:

பொதுவாகவே பலர் வீடுகளில் துளிசியை பரவலாக காண முடியும். வெறுமென மூலிகை தன்மையை மட்டுமல்லாது காற்றை சுத்தப்படுத்தும் தன்மையையும் துளசி கொண்டுள்ளது. குறைந்த நேர சூரிய வெப்பமே துளசிக்கு போதுமானதாக உள்ளது.

Click for more trending news


.