தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள்படி, ஒரு பெண்ணுக்கு முதல் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது மட்டும்தான் சலுகைகள் கொடுக்கப்படும்
ஹைலைட்ஸ்
- 2019 வழக்கின் மேல் முறையீட்டில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது
- உள்துறை அமைச்சகத்திடமும் நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது
- தமிழகத்தில் பெண்களுக்கு 180 நாட்கள் கர்ப்ப கால விடுமுறை கொடுக்கப்படும்
Chennai: பணி செய்யும் பெண்கள், தனது முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து, மீண்டும் இன்னொரு குழந்தையைப் பெற்றால் அவருக்குக் கர்ப்பகால சலுகைகள் கொடுக்கப்படாது என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இரண்டாவது பிரசவத்தில் பிறக்கும் குழந்தை, மூன்றாவது குழந்தையாகக் கருதப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் படி, ஒரு பெண்ணுக்கு முதல் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது மட்டும்தான் சலுகைகள் கொடுக்கப்படும். இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது ஒன்றன்பின் ஒன்றாகத்தான் அவை பிறக்கின்றன. அப்படிப் பார்த்தால் அவைகளின் வயது என்பது வேறாக இருக்கிறது. எனவே, அது இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்குச் சமமாகவே கருத வேண்டும்,” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதிகள் ஏ.பி.சாகி மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் இது குறித்துப் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜூன் 18 ஆம் தேதி, சிஐஎஸ்எப் படையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, தமிழக அரசுப் பணியாளர்களுக்கு வழங்கும் 180 நாட்கள் கர்ப்ப கால விடுமுறை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம், சிஐஎஸ்எப் படைப் பிரிவில் இருக்கும் பெண்ணுக்குத் தமிழக அரசுப் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் பொருந்தாது. மத்திய அரசு வகுத்துள்ள சட்ட விதிகள்தான் பொருந்தும் என்று வாதிட்டது.
2019 உத்தரவுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மேல்முறையீடு செய்தது. அதில்தான், மேல் குறிப்பிட்டுள்ள, ‘இரட்டைக் குழந்தைகளுக்குப் பின்னர் பெரும் குழந்தை மூன்றாவது குழந்தையே' என்னும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.