This Article is From Jul 21, 2020

தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்ப சொத்து அல்ல: பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம்!

இனிமேலாவது சுயவிளம்பரங்களுக்காக போராட்டங்கள் அறிவிப்பதை விடுத்து, மக்களுக்கு பயனுள்ள செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள திமுக முன் வர வேண்டும்.

தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்ப சொத்து அல்ல: பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம்!

தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்ப சொத்து அல்ல: பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம்!

திராவிடம் பேசி இனியும் தமிழர்களை ஏமாற்ற முடியாது; தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்ப சொத்த அல்ல என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற சிபிஎஸ்இ பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சியின் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் நோட்டாவை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என்று கூறியருந்தார். 

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியதாவது, திமுக தலைவர் ஸ்டாலின், எதற்கெடுத்தாலும் பாஜகவை, மத்திய அரசைக் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடி, கடின உழைப்பால், மக்களின் ஆதரவால், மக்களின் ஆசியால் பிரதமராக விளங்குகிறார். உங்களைப் போல் தந்தையின் ஆதரவோடு திணிக்கப்பட்ட தலைவராக அல்ல. உலகப் பொதுமறையான திருக்குறள் உலகம் முழுமைக்கும் சொந்தமானது. இதன் பெருமைகளை பாரதப் பிரதமர், உலகமறியச் செய்து கொண்டிருக்கின்றார். தமிழ் மறையாம் திருக்குறளை, இமயத்தின் உச்சியில் நின்று பேசுவதை தங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ராணுவ உடை அணிந்து, திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினால் தமிழர்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா? என்று, மொழியை வைத்து அரசியல் நடத்தும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் கேட்டது கண்டனத்திற்குரியது. திருக்குறள் திமுகவின் குடும்பச் சொத்தல்ல. தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு, தமிழை உயர்த்தும் தலைவரின் மகத்துவம் புரியாதுதான்.

ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் என்றுமே செயல்பட்டது கிடையாது. அவர் சட்டப்பேரவைக்கு உள்ளே பேசியதை விட, வெளிநடப்பு செய்த பிறகு சட்டப்பேரவைக்கு வெளியே பேசியதுதான் அதிகம். எதற்கெடுத்தாலும் மத்திய, மாநில அரசுகளைக் குறை சொல்லத் தெரியும்.

இனிமேலாவது சுயவிளம்பரங்களுக்காக போராட்டங்கள் அறிவிப்பதை விடுத்து, மக்களுக்கு பயனுள்ள செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள திமுக முன் வர வேண்டும். எதிர்க்கட்சி என்பது, எதிரிக்கட்சி அல்ல என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். தமிழக மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது. 

மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்போது தமிழ்க்கடவுள் முருகனை கொச்சைப்படுத்துவதை வேடிக்கையாக பார்த்தீர்களோ, அப்போதே உங்கள் திராவிட மாயை மக்களுக்குப் புரிந்து விட்டது. இனியும் திராவிடம் பேசி தமிழர்களை ஏமாற்ற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.