This Article is From Jul 09, 2018

உலகின் மிகப் பெரிய போன் உற்பத்தித் தொழிற்சாலை: பிரதமர் மோடி திறந்துவைப்பு!

உலகின் மிகப் பெரிய போன் உற்பத்தித் தொழிற்சாலையை, டெல்லிக்கு அருகில் இருக்கும் நொய்டாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

ஹைலைட்ஸ்

  • தென் கொரிய அதிபர் மூன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
  • இந்தத் தொழிற்சாலையின் மூலம் ஆண்டுக்கு 12 கோடி போன்கள் தயாரிக்கப்படும்
  • தற்போது 40 கோடி இந்தியர்கள் போன் பயன்படுத்தி வருகின்றனர், மோடி
NOIDA:

உலகின் மிகப் பெரிய போன் உற்பத்தித் தொழிற்சாலையை, டெல்லிக்கு அருகில் இருக்கும் நொய்டாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான தென் கொரியாவைச் சேர்ந்த சாம்ஸங் நிறுவனத்தின் தொழிற்சாலையைத் தான் பிரதமர் மோடி திறந்து வைத்தார். தென் கொரிய அதிபரான் மூன் ஜேவும், மோடியுடன் தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

இந்தத் தொழிற்சாலையின் மூலம் ஓர் ஆண்டுக்கு 12 கோடி போன்களை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்ஸங் நிறுவனத்தின் மிகக் குறைந்த விலை போன்களிலிருந்து மிக அதிக விலை கொண்ட போன் வரை இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய முடியும். ஒரு மாதத்துக்கு சராசரியாக இந்த ஆலையில் 1 கோடி போன்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் 70 சதவிகித போன்கள் இந்தியாவில் விற்பனை செய்ய பயன்படும் என்றும், மீதம் இருக்கும் 30 சதவிகித போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்சாலை திறப்பு விழாவின் போது பேசிய மோடி, ‘இந்தத் தொழிற்சாலையின் மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இன்னும் வேகம் பிடிக்கும். இந்தத் தொழிற்சாலையின் மூலம் உத்தர பிரதேசம் மற்றும் இந்தியா பெறுமை கொள்ளும். சாம்ஸங் நிறுவனம் இதுவரை ஏறக்குறைய 70,000 பேருக்கு வேலை கொடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலையின் மூலம் மேலும் 1000 பேருக்கு வேலை கிடைக்கும்’ என்றார் பெருமிதத்துடன்.

சென்ற ஆண்டு, செல்போன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்தது மத்திய அரசு. இதன் மூலம், இந்தியாவில் அந்தப் பொருட்களை உற்பத்தி செய்ய மறைமுகமாக நிர்பந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென் கொரிய அதிபர் மூன் மற்றும் மோடி டெல்லி மெட்ரோ ரயில் மூலம் சென்றனர். 

சென்ற ஆண்டு அமெரிக்காவை இந்தியா முந்தி உலகின் இரண்டாவது மிகப் பெரிய செல்போன் மார்க்கெட்டாக உருவெடுத்தது. முதலிடத்தில் சீனா நீடித்து வருகிறது. சிஸ்கோ நடத்திய ஒரு ஆய்வின்படி, 2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 78 கோடி பேர் செல்போன் பயன்படுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 35.9 கோடியாகத்தான் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

.