கோலா, தம்ஸ் அப்பை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்! (Representational)
New Delhi: கோகோ கோலா மற்றும் தம்ஸ் அப் உள்ளிட்ட குளிர்பானங்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், மனுதாரர் "இந்த விஷயத்தில் எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லாமல்" மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உமேத்சிங் பி சாவ்தா என்பவர் கோகோ கோலா மற்றும் தம்ஸ் அப் ஆகிய குளிர்பானங்களின் விற்பனையை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரர் ஒரு 'சமூக ஆர்வலர்' என்று கூறுகிறார்.
ஆனால், மனுதாரருக்கு இந்த விஷயத்தில் தொழில்நுட்ப அறிவு இல்லாமல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது கூற்றுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை" என்றனர்.
இதைத்தொடர்ந்து, மனுதாரர் சாவ்தா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், "இரண்டு குறிப்பிட்ட பிராண்டுகள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இலக்காக தேர்வு செய்துள்ளார் என்பதை வெளியிட அவரது ஆலோசகர் தவறிவிட்டார் என்று கூறியுள்ளது.
தொடர்ந்து, உச்சநீதிமன்றம், அபராதம் விதித்தபோது, மனுதாரர் சட்டத்தின் செயல்பாட்டை தவறாகப் பயன்படுத்தினார் என்றும், கோகோ கோலா மற்றும் தம்ஸ் அப் ஆகியவை "ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்ற தனது கூற்றை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.
மனுதாரரின் ஆலோசனையைக் கேட்டபின், "பிரிவு 32ன் கீழ் பொது நல வழக்குகளில் அதிகார வரம்பை அழைப்பது ஒரு நல்ல வழி அல்ல என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
இதன் விளைவாக, மனுவை தள்ளுபடி செய்வதோடு, முன்மாதிரியாக செலவுகளை செலுத்துவதும் அவசியம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருமாதத்திற்குள் ரூ.5 லட்சத்தை உச்ச நீதிமன்ற பதிவேட்டில் டெபாசிட் செய்து, அதனை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்திற்கு வழங்குமாறு சவ்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.