This Article is From Aug 11, 2020

மறைந்த மனைவியின் சிலையை உருவாக்கிய அன்புக் கணவன்… இன்ப அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!

நடக்கவோ பேசவோ முடியாது என்றாலும் மாதவியின் சிலை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

நிகழ்ச்சியின் போது, வீட்டின் நடுவில் பிங்க் வண்ணத்தில் புடைவை கட்டி, சிரித்த நிலையில் மாதவி அமர்ந்திருப்பது போன்றே காட்சியளித்தது அந்தச் சிலை.

Bengaluru:

கர்நாடகாவின் கோப்பாலா மாவட்டத்தில் உள்ள பிரபல தொழிலதிபர், புதிதாக வீடு கட்டி அதற்குப் புதுமணைப் புகுவிழா நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தன் மனைவியின் நினைவாக, அவரைப் போன்ற ஒரு சிலையை உருவாக்கியுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அனைவரும், இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தன் மனைவி மாதவிக்குப் பிடித்தது போல அந்த வீட்டை உருவாக்கியுள்ளார் தொழிலதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா. துரதிர்ஷ்டவசமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவியை, கார் விபத்தில் பறிகொடுத்தார். இருப்பினும் அவர் நினைவாக, தன் அன்பை சிலை செய்து வெளிப்படுத்தியுள்ளார் குப்தா. 

நிகழ்ச்சியின் போது, வீட்டின் நடுவில் பிங்க் வண்ணத்தில் புடைவை கட்டி, சிரித்த நிலையில் மாதவி அமர்ந்திருப்பது போன்றே காட்சியளித்தது அந்தச் சிலை.

“என் வீட்டில் என் மனைவி மீண்டும் இருக்கிறாள் என்பது நெகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. இது அவருடைய கனவு இல்லம். அவருடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போலத்தான் இந்த மொத்த வீடும் கட்டப்பட்டது. இந்த வீட்டின் மொத்தக் கட்டுமானத்தையும் அவர்தான் மேற்பார்வையிட்டார்” என்று உணர்ச்சிப் பொங்க பகிர்ந்து கொள்ளும் ஸ்ரீநிவாஸ் குப்தா,

சிலையை உருவாக்கிய பின்னணி பற்றி, “பெங்களூருவைச் சேர்ந்த கலைஞர் ஸ்ரீதர் மூர்த்தி, சிலையை செய்ய ஓராண்டு எடுத்துக் கொண்டார். மெழுகிற்கு பதிலாக சிலிகோன் பயன்படுத்தி சிலையை செய்துள்ளோம். வீட்டிற்கு உள்ளேயே வைத்துதான் சிலையை செய்து முடித்தோம். எங்களின் கட்டட வடிவமைப்பாளர் ரங்காண்ணான்வரின் உதவியுடன் அதைச் செய்தோம்” என்று விளக்குகிறார். 

“கோப்பால் மாவட்டம் வெப்பமான பகுதி என்பதால் மெழுகிற்கு பதிலாக சிலிகோன் பயன்படுத்தலாம் என்று எங்கள் கட்டட வடிவமைப்பாளர் பரிந்துரைத்தார். எல்லா நேரத்திலும் குளிர்சாதன வசதியுடன் சிலையை பராமரிக்க முடியாது என்பதனால் இந்த ஏற்பாடு” என்றார் குப்தா முடிவாக.

நடக்கவோ பேசவோ முடியாது என்றாலும் மாதவியின் சிலை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

.