This Article is From Jul 22, 2019

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி என புரளி!

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக, குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது.

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி என புரளி!

தனது ஆட்சிக்கு நெருக்கடி தரும் பாஜகவை குமாரசாமி கடுமையாக விமர்சித்தார்.

Bengaluru:

கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து, அது புரளி என முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக, குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், குமாரசாமி உடல்நலமில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் புரளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஏற்கனவே ஆளுநர் விதித்த கெடுவை புறக்கணித்த நிலையில், அன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என அடுத்த கெடுவை ஆளுநர் விதித்தார். 

இதனிடையே, வெள்ளியன்று, சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய குமாரசாமி, பாஜகவை கடுமையாக எச்சரித்தார். தனது 14 மாத அரசை கவிழ்க்கவே பாஜக அனைத்து சதி வேலைகளையும் செய்ததாக தெரிவித்தார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ரூ.40-50 கோடி வரை வழங்குவதாக பாஜக பேரம் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டினார். இதனிடையே, பேசிய எடியூரப்பா, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

அதற்கு பதிலளித்த குமாரசாமி, '14 மாதம் ஆட்சியில் இருந்த நாங்கள் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டோம். சில விஷயங்களை விவாதிக்கலாம். நீங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைக்கலாம். அதற்கு அவரசம் இல்லை. அதனை நீங்கள் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையில் மேற்கொள்ளலாம். நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை' என்று அவர் கூறினார். 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனிடையே, சுயேட்சை எம்எல்ஏக்கள் இரண்டு பேர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயரும். 
 

.