This Article is From Apr 09, 2020

“ஊரடங்கை நீட்டிக்கிறீங்களா..? அப்ப குடும்பத்துக்கு ரூ.10,000 கொடுங்க!”- செக் வைக்கும் திருமா

"முழு அடைப்பின் காரணமாக பட்டினிச்சாவுகள் நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும்"

“ஊரடங்கை நீட்டிக்கிறீங்களா..? அப்ப குடும்பத்துக்கு ரூ.10,000 கொடுங்க!”- செக் வைக்கும் திருமா

"தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம், மக்களுக்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை."

ஹைலைட்ஸ்

  • கொரோனா பரவலைத் தடுக்க தற்போது நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது
  • வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது
  • ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்திய அளவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த இந்த ஊரடங்கு உத்தரவு, வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு அமல் செய்த பின்னரும், கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து கொண்டேயுள்ளது. இதனால், ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பபுள்ளதாக தெரிகிறது. பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தையில், ஊரடங்கை உடனடியாக முடித்துக் கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன், “இந்திய பிரதமர் எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு தொடரும் என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். அவ்வாறு தொடருமேயானால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் பேரிடர்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

முழுஅடைப்பு தொடர வேண்டுமென பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், 11ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசிய பிறகு அது குறித்து அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். முழு அடைப்பு தொடர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அவரது அறிவிப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கு தேவைப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கும்.

அதே நேரத்தில் இந்த முழு அடைப்பின் காரணமாக பட்டினிச்சாவுகள் நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம், மக்களுக்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10000/- ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்தப் பேரிடரை எதிர்கொள்வதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார். இது அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசின் சார்பில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டியிருப்பது ஏனென்று விளங்கவில்லை.

தற்போது கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு 510 கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழும் கேரளாவுக்கு மிக மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.அதே நேரத்தில் மகராஷ்டிராவுக்கு 1611 கோடியும்; உத்தரப் பிரதேசத்துக்கு 966 கோடியும்; மத்திய பிரதேசத்திற்கு 910 கோடியும்; பீகாருக்கு 708 கோடியும்; ஒடிசாவுக்கு 802 கோடியும்; ராஜஸ்தானுக்கு 740.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணுகுமுறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கொரோனா பிரச்சனை காரணமாக புதுச்சேரி மாநிலத்துக்கு சுற்றுலா மூலமும், எக்சைஸ் வரிவசூல் மூலமும் கிடைக்கக்கூடிய தொகை முற்றிலுமாக நின்று போய்விட்டது. இந்நிலையில், சிறிய மாநிலமான புதுச்சேரி தற்போது வருவாய் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் வஞ்சித்திருப்பது அது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. மத்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

நிதிப் பற்றாக்குறையால் அம்மாநிலத்தில் வாழும் மக்கள் கொரோனாவுக்குப் பலியாகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே புதுச்சேரி அரசுக்கு உடனடியாக உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாகும் எனவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் நீண்டகாலமாக கொடுக்கப்படாமல் இருக்கும் ஜிஎஸ்டி வரி பாக்கியையும் உடனடியாக தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்,” என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

.