This Article is From Oct 16, 2018

“நான் பேச ஆரம்பித்தால் காங்கிரசுக்கு ஓட்டு விழாது”- திக் விஜய்சிங் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மத்திய பிரதேச தேர்தல் பொதுக்கூட்டங்களை தவிர்த்து வருகிறார். இதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்

“நான் பேச ஆரம்பித்தால் காங்கிரசுக்கு ஓட்டு விழாது”- திக் விஜய்சிங் பேட்டி

திக் விஜய் சிங்கின் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

New Delhi:

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து பாஜகதான் ஆட்சியில் இருந்து வருகிறது. இங்கு 3 முறை கடந்த 15 ஆண்டுகளாக சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்த நிலையில் அடுத்த மாதம் 28-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் எப்படியாவது பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

மத்திய பிரதேச காங்கிரசுக்குள் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், விரும்பாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே, மூத்த தலைவரான திக் விஜய் சிங் பொதுக்கூட்டத்தில் பேசுவதை தவிர்த்து வருகிறார். இதற்கு காரணம் என்னவென்று பலரும் கேட்கத் தொடங்கினர். இந்த நிலையில் அவர் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளர்.

இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ நம் விரோதிக்கே தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்தாலும் அதனை நாம் ஏற்றுக் கொண்டு கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். நமக்கு வேலை செய்வது மட்டும்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும். விளம்பரத்தை நாம் விரும்பக்கூடாது. நான் பொதுக் கூட்டத்தில் பேச ஆரம்பித்தால் காங்கிரசுக்கு ஓட்டு விழாது. எனவேதான் நான் பேசுவதை தவிர்த்து வருகிறேன் என்றார்.

சமீப காலமாக திக் விஜய் சிங் சர்ச்சை பேச்சுக்களை பேசி வருகிறார். காங்கிரஸ் கூட்டணியில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியை சேர்க்க கூடாது என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இது காங்கிரஸ் மேலிடத்திற்கு சிக்கலை அளித்துள்ளது. இந்நிலையில்தான் பிரசாரக் கூட்டத்தில் பேசுவதை தவிர்த்து வருகிறார் திக் விஜய் சிங்.

.