This Article is From Sep 26, 2018

‘ரஃபேல் ஒப்பந்தம் இறுதியான போது நான் பிரான்ஸ் அதிபராக இல்லை!’- மேக்ரன் பேச்சு

இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது

இந்திய அரசு தான், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு சிபாரிசு செய்தது, முன்னாள் அதிபர் ஹாலண்டே

ஹைலைட்ஸ்

  • 2016-ல் மோடி பிரான்ஸ் சென்றபோது ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது
  • மேக்ரன் கடந்த ஆண்டு மே மாதம்தான் பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • இந்தியதான், ரிலையன்ஸுடன் இணைந்து வேலை செய்யுமாறு சொன்னது, ஹாலண்டே
United Nations:

இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் அது குறித்து ஐ.நா கூட்டத்தில் பேசியுள்ளார். 

8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. 36 ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான முறையற்றப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே, ‘இந்திய அரசு தான், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு சிபாரிசு செய்தது. இது குறித்து எங்களுக்கு எந்த தேர்ந்தெடுக்கும் உரிமையும் தரப்படவில்லை’ என்று பகீர் தகவலை தெரிவித்தார். 

இது குறித்து அதிபர் மேக்ரனிடம் கேட்டபோது, ‘ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட போது நான் பதவியில் இல்லை. ஆனால் இது இரு நாட்டு அரசுக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தம். ராணுவ ஒத்துழைப்புத் தொடர்பாக போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன’ என்று கூறினார். 

கடந்த ஆண்டு மே மாதம் தான், மேக்ரன் பிரான்ஸ் நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் ஹாலண்டே, பிரான்ஸ் அதிபராக இருந்த போது கடந்த ஆண்டு துவக்கத்தில், ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 

ஹாலண்டேவின் கருத்தை, அதிபர் மேக்ரன் மற்றும் டசால்ட் நிறுவனம் நிராகரித்துள்ளன. இருப்பினும் ஹாலண்டேவின் கருத்தால் இந்தியாவில் ரஃபேல் விவகாரம் தொடர்பான சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது. ஹாலண்டேவின் கருத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, மோடி தலைமையிலான மத்திய அரசு முறையற்ற ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று குற்றம் சாட்டி வருகிறது. 

ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதியளவு நிதியான 30,000 கோடி ரூபாயை டசால்ட் நிறுவனம், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து விமானத்துக்குத் தேவையானவைகளை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தான், இந்தியாவில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் குழுமத்தை தேர்ந்தெடுத்தது டசால்ட்.
 

.