This Article is From Nov 29, 2018

கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது: ஜெயக்குமார்

புயல் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வாங்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது: ஜெயக்குமார்

முன்னதாக, கடந்த 15ஆம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 60–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோன்று மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து உள்ளது. அவர்களின் நாட்டு படகுகள், இயந்திர படகுகள் போன்றவை சேதமடைந்து உள்ளன.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. 877 நாட்டு படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. 1,424 விசைப்படகுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளது, 200 படகுகள் கடலில் மூழ்கியும், ஒன்றோடு ஒன்று மோதியும் முழுவதுமாக சேதமடைந்துள்ளது

சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.85 ஆயிரம் வரை வழங்க வழியுள்ளது. மீனவர்கள் நலனுக்காக ரூ.1,300 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வாங்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இயந்திர படகுகளின் சேதத்துக்கு ரூ.3 லட்சம் வரை இழப்பீடு வழங்கினால் பழுது பார்க்க முடியும் என்றார்.

மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வழங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி ஆலோசிக்கப்படும். மீனவர்களின் நிவாரண நிதி கோரிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

.