This Article is From Apr 07, 2019

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச திமுகவுக்கு அருகதை கிடையாது: எடப்பாடி

எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக திமுக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச திமுகவுக்கு அருகதை கிடையாது: எடப்பாடி

பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கட்சி பாகுபாடின்றி ரூ.1000 வழங்கப்பட்டது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச திமுக-வுக்கு அருகதை கிடையாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

அந்தவகையில், கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு திமுகவினருக்கு அருகதை கிடையாது. இவர்களாலேயே பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்குகின்றனர். ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் பிரியாணி உள்பட அனைத்து கடைகளுக்குள்ளும் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் உரிமையாளர்களை தாக்குகின்றனர். மறுநாள் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்ய செல்கிறார்.

ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கட்சி பாகுபாடின்றி ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் திமுக இந்த ரூபாயை கொடுப்பதற்கு தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக திமுக உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை பொய்யானது. விவசாயிகளுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோதும் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை கேட்டுப் பெறவில்லை என்றும் தேர்தல் சமயங்களில் மட்டும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஓட்டு கேட்க வருகிறார்கள் என்று அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

.