This Article is From Jul 16, 2020

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஊரடங்கு காலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை.

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மார்ச், ஏப்ரல் மாத மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யமுடியாமல் போனது, இதனால், மின்சார பயனாளர்கள் பிப்ரவரி மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தலாம் என்றும் பின்னர் மின் கணக்கீடு செய்யும் போது, மொத்தமாக இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு, முன்பு கட்டிய கட்டணத்தை கழித்து மீத தொகையை செலுத்த வேண்டும் என அரசு அறிவித்தது. 

அதன் அடிப்படையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அனைத்து நுகர்வோரும் மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, மார்ச். ஏப்ரல், மே, ஜூன் உள்ளிட்ட 4 மாதங்களுக்கும் மொத்தமாக கணக்கீடு செய்து மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்து வந்துள்ளதாக பயனாளர்கள் கடுமையாக குற்றம்சாட்டு எழுந்தது. ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது இந்த மின் கணக்கீடு என்பது தவறு, இதனால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும், 4 மாதத்திற்கு மொத்தமாக கட்டணம் வசூல் செய்யப்பட்டால் கட்டண விகிதம் பலமடங்காக அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்த வழக்கின் விசாரணையின் போது, அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிகளை பின்பற்றியே மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என தமிழக அரசின் வாதத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் மின் கட்டண அதிகரிப்பு குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி, ஊரடங்கு காலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. மத்திய பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர்நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாக செய்திக்குறிப்பு ஒன்றைக் கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கவலைகொள்ளாத கருணையற்ற போக்காகும்.

ஆகவே, அதிமுக அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ஊரடங்கு கால மின்கட்டணத்தை  குறைக்கக் கோரியும், குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், வரும் 21-7-2020ம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

.