This Article is From Dec 07, 2018

‘ரத யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது!’: முற்றும் அமித்ஷா - மம்தா மோதல்

2 யாத்திரைகள் முடிந்த பின்னர், கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து பேசியுள்ள அமித்ஷா, ‘எல்லா யாத்திரைகளும் திட்டமிட்டபடி நடக்கும். எங்களை யாராலும் தடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார்

New Delhi:

பாஜக தலைவர் அமித்ஷா, மேற்கு வங்கத்தில் இன்று ஒரு பேரணியில் கலந்து கொள்வதாக இருந்தது. அவரது பேரணிக்கு அரசு தரப்பு அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, ‘மேற்கு வங்கத்தில் தற்போது ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. ஜனநாயகத்தின் குரல்வலையை மம்தா பானர்ஜி நெருக்குகிறார்' என்று கொதித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, பாஜக, மேற்கு வங்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இன்றிலிருந்து மாநிலம் முழுவதிலும் பயணம் செய்யும் வகையில் 3 ரத யாத்திரைக்கு பாஜக திட்டம் தீட்டியிருந்தது. ஆனால், அதற்கு பின்னடைவு ஏற்படும் வகையில் அரசு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள அமித்ஷா, ‘எல்லா யாத்திரைகளும் திட்டமிட்டபடி நடக்கும். எங்களை யாராலும் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார்.

ரத யாத்திரைக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம், நேற்று தடை விதித்து தீர்ப்பளித்தது. யாத்திரையால் இரு சமூகங்களுக்கு இடையில் மோதல் வரலாம் என்ற அடிப்படையில் அதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ரத யாத்திரை, வங்கத்தில் இருக்கும் 42 லோக்சபா தொகுதிகளையும் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது பாஜக-வுக்கு வங்கத்தில், 2 லோக்சபா இடங்களே கைவசம் உள்ளன. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தம் 22 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார் அமித்ஷா.

2 யாத்திரைகள் முடிந்த பின்னர், கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.