This Article is From Jul 05, 2018

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும் டெல்லி அரசுக்கு மதிப்பில்லை!

டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கம் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது

ஹைலைட்ஸ்

  • டெல்லி அரசுக்கே அதிகாரம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
  • இதையடுத்து, இன்று பணி மாறுதல் உத்தரவை அரசு அனுப்பியது
  • ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை
New Delhi:

டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கம் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே இருப்பதாக நெத்தியடி தீர்ப்பை தந்துள்ளது, 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான புது டெல்லி அரசு பிறப்பித்த முதல் உத்தரவு முன்னர் போலவே நிராகரிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு டெல்லி மாநில ஆட்சிப் பொருப்பை ஆம் ஆத்மி ஏற்றுக் கொண்டதில் இருந்து டெல்லி அரசுக்கும், பாஜக-வால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் அனில் பைஜலுக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது. மத்திய பா.ஜ.க அரசு, ஊழல் தடுப்பு துறையை டெல்லி அரசிடம் இருந்து பறித்தபோது முதல் பிரச்சனை தொடங்கியது. மேலும், மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு, துணை நிலை ஆளுநரின் அனுமதி கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்ததால், பிரச்சனை தீவிரமடைந்தது.

சில நாட்களுக்கு முன் டெல்லியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வர துணை நிலை ஆளுநர் தலையிட வேண்டும் என கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியினர் 9 நாட்கள், துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தின் போது இரு தரப்புக்கும் இருந்து உறவு மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியது. இந்நிலையில் தான் டெல்லி அரசுக்கு சாதகமாக இந்தத் தீர்ப்பு வந்தது. 

இதையடுத்து, அரசு அதிகாரிகளுக்கு பணி மாறுதல் உத்தரவை பிறப்பித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பியது டெல்லி அரசு. ஆனால், வழக்கம் போல இந்த முறையும் அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், ‘உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்திருந்தாலும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து சுற்றறிக்கை வராமல் நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது’ என்றும் பணி மாறுதலுக்கு உத்தரவு அளிக்கும் துறை தெரிவித்துவிட்டது. 

இதனால் கொதிப்படைந்த ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லியைப் பொறுத்தவரை துணை நிலை ஆளுநர் எந்தவித பணி மாறுதல்களையும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால், உள்துறை அமைகத்திடமிருந்து முறையான அறிக்கை வரும் வரை துணை முதல்வர் பிறப்பிக்கும் பணி மாறுதல் உத்தரவை மதிக்கமாட்டார்களாம்’ என்று பதிவு செய்துள்ளது.

.