விரைவில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமையும்- பி.டி.அரசக்குமார்
பாஜக-வின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசக்குமார், யாரும் எதிர்பாராத விதமாக இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நேற்று வரை பாஜகவில் அரசியல் களமாடி வந்த அரசக்குமார், இன்று திமுகவில் சேர்ந்தது குறித்து பல்வேறு தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் உலவி வருகின்றன.
பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பி.டி.அரசக்குமார், “உள்ளாட்சியில் நல்லாட்சித் தந்தவர் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே நாளில் முதல்வராகி இருக்கலாம். ஆனால், அவர் அப்படி எதையும் சரி செய்யவில்லை. காரணம், அவர் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயகத்தின் வாயிலாகப் பெற வேண்டும் எனப் பொறுமையைக் கடைப்பிடித்து வருகிறார். அவர் முதல்வராகும் நாள் விரைவில் வரும்,” என்று பகீர் கிளப்பும் வகையில் பேசினார்.
அவரின் இந்தப் பேச்சை சக பாஜக நிர்வாகிகள் ரசிக்கவில்லை. உடனடியாக கட்சியின் தேசியத் தலைமைக்கு விஷயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. “நமக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி உள்ளது. மேலும் திமுகவுக்கும் நமக்கும் கொள்கை முரண் உள்ளபோது, அந்தக் கட்சியின் தலைவரை இப்படிப் புகழ்ந்துள்ளதை வெறுமனே விட்டுவிடக் கூடாது,” என்று புகார் கூறியுள்ளனர் தேசியத் தலைமைக்கு நெருக்கமான புள்ளிகள். தொடர்ந்து அரசுக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கைப் பாய்ந்துள்ளது.
இதனால் அரசக்குமார் தரப்பு மிகுந்த கோபமடைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், அவரைப் பலர் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் இன்று அவர் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். “பாஜகவின் தேசியத் தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை. விரைவில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமையும்,” என்று பன்ச் கொடுத்துள்ளார். தற்போதைக்கு அவருக்குக் கட்சியில் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. விரைவில் அது குறித்து அறிவிப்பு வரலாம்.