Citizenship Amendment Bill - திடீரென்று அவரது ஒலிப்பெருக்கி செயலிழக்கம் செய்யப்பட்டது...
Citizenship Amendment Bill- பல மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. 311 லோக்சபா உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க, 80 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இந்த மசோதா என்னும் வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது குறித்த விவாதத்தின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், “இந்த மசோதா ஈழத் தமிழர்களுக்கும் இஸ்லமியர்களுக்கும் எதிரானது,” என்று கொதித்தார்.
திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவில், பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இது குறித்து லோக்சபாவில் பேசிய திருமாவளவன், “பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் இந்தியாவில் குடியுரிமை கொடுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. அப்படியென்றால், இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது பாசிசத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அந்த நாடுகளில் அரசு மதங்களாக இருப்பது இஸ்லாம் என்று சொல்லியே, மற்ற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது எனப்படுகிறது.
அப்படியென்றால், அண்டை நாடுகளான மியான்மரிலும் இலங்கையிலும் அரசு மதங்கள் இருக்கின்றனவே. அந்த நாடுகளிலும் சிறுபான்மையினர் இருக்கிறார்களே. இலங்கையில் இருந்து சுமார் 1 லட்சம் ஈழத் தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதில் 70,000 பேர் முகாம்களிலும் 30,000 பேர் வெளியிலும் உள்ளார்கள். அவர்களின் உரிமை பற்றி இந்த மசோதா பேசவில்லையே… ஏன்?
அவர்கள் மத்திய அரசின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், இந்துக்கள். இத்துக்களாக இருக்கும் ஈழத் தமிழர்களை இந்த அரசு ஒதுக்குவது எதனால்?” என்று கேள்வியெழுப்பினார். திடீரென்று அவரது ஒலிப்பெருக்கி செயலிழக்கம் செய்யப்பட்டது. இருந்தும் ஈழத் தமிழர்கள் பற்றி அவர் தொடர்ந்து பேசினார். பின்னர் அவையின் சபாநாயகர் திருமாவளவனை அமரும்படி வற்புறுத்தினார்.