This Article is From Jan 25, 2020

பெரியார் - ரஜினி சர்ச்சை: தோழர் நல்லக்கண்ணு வைத்த கொட்டு!!

Rajini Periyar Row: 'ராமசாமி நாயக்கராக இருந்த அவர் இன்று எல்லோராலும் பெரியார் என்று மரியாதைக்குரிய வகையில் அழைக்கப்படுகிறார்'

பெரியார் - ரஜினி சர்ச்சை: தோழர் நல்லக்கண்ணு வைத்த கொட்டு!!

Rajini Periyar Row: "அவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை ரஜினி ஏன் இப்படி பேசினார் என்று எனக்குத் தெரியவில்லை"

Rajini Periyar Row: சென்ற வாரம் நடந்த ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு பல தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வன்றனர். ரஜினிக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்த போதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வாரங்கள் கடந்து இந்தப் பிரச்னை தொடர்ந்து கனன்று கொண்டிருக்கிறது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர், தோழர் நல்லக்கண்ணு பேசியுள்ளார். 

“பெரியார் என்பவர், வெறுமனே ஒரு தனி நபர் அல்ல. ராமசாமி நாயக்கராக இருந்த அவர் இன்று எல்லோராலும் பெரியார் என்று மரியாதைக்குரிய வகையில் அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம் என்ன. வைக்கம் உள்ளிட்ட போராட்டங்கள், சுயமரியாதைக்காக அவர் செய்த பணிகள், சமூக சீர்திருத்தத்திற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என எல்லாம்தான் அவரை உயரிய இடத்தில் நிறுத்தியது. ஆனால், அவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை ரஜினி ஏன் இப்படி பேசினார் என்று எனக்குத் தெரியவில்லை. அவரே, அது மறக்கப்பட வேண்டிய விஷயம் என்கிறார். மறக்கப்பட வேண்டிய விஷயத்தை இப்போது நியாபகப்படுத்தியது ஏன்,” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நல்லக்கண்ணு. 

im1ljusg

முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதை ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அந்தச் சிலைகளுக்கு செருப்பு மாலைகளும் அணிவிக்கப்பட்டிருந்தன. கடவுள் அவதாரங்களை செருப்பால் அடித்தார்கள். இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது,” என்று சர்ச்சையாக பேசினார். 

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

.