This Article is From Oct 23, 2019

பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்காதது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!!

அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார்.

பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்காதது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!!

தீபாவளிக்கு வெளியாகும் எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை


அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்ததன் காரணமாகவே சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில், நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு 25-ம் தேதி திரைக்கு வருகின்றன. 

இதையொட்டி பெரும்பான்மையான திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி, 4 மணி என ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நேரங்களில் ரசிகர்கள் சிறப்புக்காட்சிகளுக்கு திரையரங்குள் ஏற்பாடு செய்திருந்தது.

ரசிகர்களும் இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். படம் ரிலீஸ் ஆகும் 25-ம்தேதி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்றைய தினம் கூறியிருந்தார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சிந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, பிகில் திரைப்படத்திற்கு மட்டுமல்ல தீபாவளிக்கு வெளியாகும் எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஊடகங்கள் பிகிலை மட்டும் முன்னிலைப்படுத்துகின்றன. 

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. ஆகவேதான் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.

ரசிகர்களும் கூட முதல் காட்சி பார்க்க 2,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த புகாருக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தால் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சிறப்பு காட்சிகளுக்கு பணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவற்றை மீண்டும் உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார். 
 

.