This Article is From Jan 21, 2019

தலைமைச் செயலகத்தில் திடீர் யாகம் ஏன்? ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!

தலைமைச் செயலகத்தில் திடீர் யாகம் நடத்தியது ஏன்? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் திடீர் யாகம் ஏன்? ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தலைமைச்செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளதாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில், இன்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, முதல்வர் எடப்படாடி இல்லாத நேரத்தில் எதற்காக ஓ.பி.எஸ் இந்த திடீர் யாகத்தை நடத்தினார்? முதல்வர் மீது உள்ள வழக்குகள் எல்லாம் முடியும் போது, நிச்சயம் எடப்பாடி பழனிசாமி கைதாகிவிடுவார். இது சீக்கிரமாக நடைபெற்றால்தான் தான் முதல்வராக முடியும் என ஓ.பன்னீர்செல்வம் இந்த யாகத்தை நடத்தியுள்ளார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

ஒன்று முதல்வராக வர வேண்டும் என்று யாகம் நடத்தியிருக்கலாம், அல்லது அங்கு இருக்கும் கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தியதாக குற்றம் சாட்டுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் அறையில் யாகம் நடத்தியதற்காக ஓ.பன்னீர்செல்வம் பதில் சொல்லியாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


மேலும் படிக்க : “யாகம் வளர்த்தால் முதல்வர் ஆகிவிட முடியுமா”- கொதிக்கும் அதிமுக

.