This Article is From Sep 06, 2019

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் காவித் துண்டுடன் பேசியது என்ன..?

"உலக அரங்கில் நாம் தலைநிமிர வேண்டும் என்றால் முதலில் நாம் இந்து என்கிற உணர்வு ஏற்பட வேண்டும்."

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் காவித் துண்டுடன் பேசியது என்ன..?

"விநாயகர் அருளால்தான் நான் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றேன்.”

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், தன் தொகுதிக்கு உட்பட்ட சின்னமன்னூர் பகுதியில் விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சியில் காவித் துண்டு போட்டபடி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், “நாமெல்லாம் முதலில் இந்து என்ற உணர்வைப் பெற்றாக வேண்டும்” என்று உரையாற்றினார். ஓ.பி.ஆரின் பேச்சு விவாதப் பொருளாகியுள்ள நிலையில், அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்புத் தெரிவித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நிகழ்ச்சியின்போது ஓ.பி.ஆர், “உலக நாடுகள் மத்தியில் நமது இந்தியா வல்லரசு நாடாக உருபெற வேண்டும் என்ற நோக்கில்தான் பிரதமர் நரேந்திர மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். உலக அரங்கில் நாம் தலைநிமிர வேண்டும் என்றால் முதலில் நாம் இந்து என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான். விநாயகர் அருளால்தான் நான் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றேன்.” என்று உரையாற்றினார். 

அவரின் இந்தப் பேச்சை சிலர் விமர்சிக்க, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, “கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு திரு.ரவீந்திரநாத் பேசினால் அது தவறா. முஸ்லிம்களுக்கு அரணாக இருப்போம், சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்றும் மாற்று மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக தீபாவளி, விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லாததை விவாதிக்கலாம் ஊடகங்கள். திரு.ரவீந்திரன் அவர்கள் நாம் இந்துக்கள் என்றதை விவாதிக்கிறது. இதுவும் இந்து விரோதமே” என்று ஓ.பி.ஆருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். 

.