This Article is From Nov 12, 2018

’மாநில வாரியாக கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம்!’- ப.சிதம்பரம் நம்பிக்கை

ப.சிதம்பரம், ‘அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் மாநில அளவிலான கட்சிகளுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்குவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

’மாநில வாரியாக கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம்!’- ப.சிதம்பரம் நம்பிக்கை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், ‘அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் மாநில அளவிலான கட்சிகளுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்குவோம்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் கள வேலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. மோடி தலைமையிலான பாஜக, மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் தக்கவைக்க முயலும். அதே நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜக-வை தோற்கடிக்க அனைத்துக்கட்ட வேலைகளையும் செய்யும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு கட்சிகள் மீதும் அதிருப்தி கொண்டவர்கள், 3வது அணி அமைப்பார்களா என்ற கேள்வியும் தொடர்ந்து இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜம்மூ – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நேரில் சந்தித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக் கிழமை சென்னைக்கு வருகைத் தந்த சந்திரபாபு, ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாடினார். சந்திப்பு நிறைவு பெற்றதையடுத்து சந்திரபாபு, ‘அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதில் நாங்கள் அனைவரும் உறுதியோடு இருக்கின்றோம். கட்சிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனக்குக் கூட காங்கிரஸுடன் கடந்த 40 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனால், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதனால், அனைவரும் ஒன்றாக வர சம்மதம் தெரிவிக்கின்றனர்' என்று கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ப.சிதம்பரம், ‘மாநில அளவில் முக்கிய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கும். அந்தக் கட்சிகள் லோக்சபா தேர்தலில் பொருவாரியான வெற்றி பெறும் போது, ஆட்சி அமைப்பதில் சிரமம் இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை காங்கிரஸிற்கு இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

.