This Article is From Oct 04, 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: பாஜகவிடம் ஆதரவு கோரிய அதிமுக!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்புகள் வெளியானதில் இருந்து, பாஜக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமா அல்லது தனித்து வேட்பாளரை நிறுத்துமா என்ற கேள்வி எழுந்தது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: பாஜகவிடம் ஆதரவு கோரிய அதிமுக!

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு - பொன்.ராதாகிருஷ்ணன்

இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.

இதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் பிரவினா மதியழகன் உட்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. 

இதனிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்புகள் வெளியானதில் இருந்து, பாஜக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமா அல்லது தனித்து வேட்பாளரை நிறுத்துமா என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரமும் துவங்கிய நிலையில் பாஜக தலைவர்கள் யாரும் அதிமுகவுக்காக பிரச்சாரமும் செய்யாமல் இருந்து வந்தனர். 

இந்நிலையில், அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமாறு பொன்.ராதாகிருஷ்ணனிடன் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கைவிடுத்தார். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

.