This Article is From May 07, 2019

கேரள முதல்வருடன் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் முக்கிய ஆலோசனை!!

மத்தியில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

கேரள முதல்வருடன் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் முக்கிய ஆலோசனை!!

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திர சேகர ராவ் இன்று சந்தித்து பேசினார்.

Thiruvananthapuram:

மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார். 

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மத்தியில் 3-வது அணியை ஆட்சிக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை அவர் சந்திக்கவிருந்த நிகழ்ச்சி தடைபட்டது. 

இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் தீவிரமாக இருப்பதால் சந்திப்பு தடைபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திர சேகர ராவ் சந்தித்து பேசினார். 

இதுகுறித்து பினராயி விஜயன் அளித்துள்ள பேட்டி-

சந்திர சேகர ராவுடன் மிக முக்கியமான விஷயங்களை பேசினோம். தேசிய விவகாரங்களை விவாதித்தோம். மத்தியில் காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. எனவே மாநில கட்சிகள்தான் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிக்கும். 

மத்தியில் அமையும் அரசுகள் மாநிலத்தின் உரிமைகளை தொடர்ந்துபுறக்கணித்து வருகின்றன. கூட்டாட்சி தத்துவம் நிலை நிறுத்தப்பட வேண்டும். 
இவ்வாறு பினராயி கூறினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.