This Article is From Jun 28, 2018

மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பை ஒத்திவைத்தது அமெரிக்கா!

‘தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக’ இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பை அமெரிக்கா ரத்து செய்துள்ளது

மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பை ஒத்திவைத்தது அமெரிக்கா!

ஹைலைட்ஸ்

  • சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணப்பட இருந்தனர்
  • இந்நிலையில் அமெரிக்கா, இந்தியாவுடனான சந்திப்பை ரத்து செய்துள்ளது
  • இந்த சந்திப்பு குறித்து ஜூன் 2017, போதே முடிவு செய்யப்பட்டது
New Delhi:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டு அந்நாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர். இந்நிலையில், ‘தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக’ இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பை அமெரிக்கா ஒத்திவைத்தது.

‘2+2 டயலாக்’ என்று பெயரிடப்பட்ட இந்த சந்திப்பு குறித்து சில மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு பயணம் செய்து அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்தார். அப்போதே, இரு நாட்டுக்கும் இடையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவது குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அமைச்சர்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், ட்ரம்ப் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதால், பேச்சுவார்த்தை நடக்காமல் தள்ளிப் போனது.

பலகட்ட யோசனைக்குப் பிறகுதான் அடுத்த வாரம் இரு நாட்டு மத்திய அமைச்சர்களும் சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிலிருந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருந்தனர். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கெல் ஆர். போம்பியோ மற்றும் ராணுவத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோருடன் இந்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சந்திப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘அமெரிக்க தரப்பு ‘2+2 டயலாக்’ சந்திப்பை தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது. சந்திப்பு ஒத்திவைத்தது குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மீண்டும் இந்தப் பேச்சுவார்த்தை எவ்வளவு சீக்கிரம் நடத்த முடியும் என்பது குறித்து இரு நாடுகளும் இணைந்து முடிவெடுக்கும்’ என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இரு நாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருந்தது.

.