This Article is From May 18, 2020

பிரியங்காவின் கோரிக்கையை ஏற்று பேருந்துகள் எல்லைக்குள் வர உ.பி. அரசு அனுமதி!!

நேற்று, உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா காங்கிரஸை கடுமையாக விமர்சித்திருந்தார். பிரியங்கா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அதிக பேருந்துகளை இயக்குமாறு கேட்க வேண்டும் என்றும், ஏனெனில் அந்த மாநிலங்கள் புலம்பெயர்ந்தோருக்கு குறைந்த ரயில்களைக் கேட்டுள்ளதாகவும் தினேஷ் சர்மா கூறியிருந்தார்.

ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்களுடன் பல பேருந்துகள் உ.பி. எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

New Delhi:

ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெளி மாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் உத்தரப்பிரதேச எல்லைக்குள் வருவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான  விவரங்கள் உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பிரியங்கா காந்தியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் ஆரேயாவில் வெளி மாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 36 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

வெளிமாநிலத்தில் பணிபுரியும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களை அழைத்து வர பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேருந்துகளில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால் பேருந்துகள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே வர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி ட்விட்டர் மூலமாக உத்தரப்பிரதேச அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'மரியாதைக்குரிய முதல்வர் அவர்களே, அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. நாங்கள் ஏற்பாடு செய்த பேருந்து உத்தரப்பிரதேச எல்லையில் நிற்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இல்லாமல் உத்தரப்பிரதேசத்திற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே பேருந்துகள் உள்ளே வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பேருந்துகள் உத்தரப்பிரதேசத்திற்குள் வருவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்திருக்கிறார். 

முன்னதாக ராஜஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பேருந்துகளை உள்ளே வருவதற்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதிக்கவில்லை என்று ராஜஸ்தான் சுற்றுலாத்துறை அமைச்சர் விஷ்வேந்திரா சிங் குற்றம் சாட்டியிருந்தார். 

நேற்று, உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா காங்கிரஸை கடுமையாக விமர்சித்திருந்தார். பிரியங்கா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அதிக பேருந்துகளை இயக்குமாறு கேட்க வேண்டும் என்றும், ஏனெனில் அந்த மாநிலங்கள் புலம்பெயர்ந்தோருக்கு குறைந்த ரயில்களைக் கேட்டுள்ளதாகவும் தினேஷ் சர்மா கூறியிருந்தார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ''புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குவதில் உத்தரப்பிரதேச அரசு திறமையாக செயல்படுகிறது. வெளி மாநில தொழிலாளர்களின் பயணத்தை எளிதாக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 200 பேருந்துகளை நாங்கள் வழங்கியுள்ளோம். எங்களுக்கு ரயில்வே அமைச்சகத்தால் 400 ரயில்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ”என்று கூறினார். 

.