This Article is From Jul 05, 2019

''ஏழை, எளிய நடுத்தர மக்களை மத்திய பட்ஜெட் கணக்கில் கொள்ளவில்லை'' : ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

'விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது; மத்திய அரசுக்கு, அவர்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை உணர்த்துகிறது' என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

''ஏழை, எளிய நடுத்தர மக்களை மத்திய பட்ஜெட் கணக்கில் கொள்ளவில்லை'' : ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

ஏழை எளிய நடுத்தர மக்களை மத்திய பட்ஜெட் கணக்கில் கொள்ளவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

''மத்திய பா.ஜ.க அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கம் போல் “அலங்கார வார்த்தைகளும்” “அறிவிப்புகளும்” நிறைந்த அணிவகுப்பாகக் காட்சியளிக்கிறதே தவிர- கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் வகையில், மாநிலங்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்படவில்லை.

இது காதுக்கு விருந்தே தவிர, கருத்துக்கு விருந்தில்லை.சாமான்ய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச மான்யத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டண உயர்வு- அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்பதில்தான் முடியும். “50 லட்சம் கோடி நிதி திரட்டும் வகையில் ரயில்வே தனியார் மயமாக்கப்படும்” என்ற அறிவிப்பு, சாதாரண மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கியமான ரயில் போக்குவரத்தை பொது மக்களிடமிருந்து தட்டிப் பறித்து, செல்வந்தர்களுக்குத் தாரை வார்ப்பதைப் போல் இருக்கிறது.

தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி நிதி நிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை- குறிப்பாக கோதாவரி-கிருஷ்ணா- காவேரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு- தமிழக அரசு கோரிக்கை விடுத்த 1000 கோடி ரூபாய் நிதியைக் கூட இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கவில்லை.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது; மத்திய அரசுக்கு, அவர்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை உணர்த்துகிறது.

பத்திரிக்கைகள் அச்சடிக்கத் தேவையான “நியூஸ் பிரின்ட்” இறக்குமதிக்கு, புதிதாக பத்து சதவீதம் “கஸ்டம்ஸ் டூட்டி” விதித்திருப்பது “பிரின்ட் மீடியாக்களை” அடியோடு முடக்கி, செய்திப் பரவலையும் கருத்துச் சுதந்திரத்தையும் தகர்த்திடும் தந்திரமாக இருக்கிறது.

ஜனநாயகத்தின் தூண்களான பத்திரிக்கைத் துறையை நசுக்கும் வகையில் இப்படியொரு வரிச்சுமையை ஏற்றி இருப்பது, ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றை பலவீனப் படுத்துவதாக இருக்கிறது.

ஆகவே பா.ஜ.க. அரசுக்கு மக்கள் அளித்த வாக்குகளுக்கு அர்த்தமில்லாமல்- அவர்களை வஞ்சிக்கும் வகையில்-மீண்டும் கார்ப்பரேட்டுகளை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த நிதி நிலை அறிக்கை; ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே மின்விநியோகம், ஒரே கல்விமுறை என்று மாநில அரசுகளைச் சிறிதும் சட்டை செய்யாத, மாநில உரிமைகளை மதிக்காத, அனைத்தையும் மையப்படுத்திடும் முயற்சிக்கு முன்னோட்டமாகவே தெரிகிறது.

இந்த நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர மக்களைக் கணக்கில் கொள்ளவில்லை, கசப்பைத் தந்திருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் சாதாரண சாமான்யர்களுக்கு மத்திய பாஜக அரசின் இந்த நிதி நிலை அறிக்கை, எட்டாத தூரத்தில் நட்டுவைக்கப் பட்டிருக்கிறது! '' 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

.