This Article is From Mar 02, 2020

“இது இன்டர்வெல்தான்… கிளைமாக்ஸ் இருக்கு!”- எடப்பாடிக்கு கெடுவைத்த உதயநிதி!!

"சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தனர் மக்கள். அது ஒரு சினிமாவின் இன்டர்வெல்தான்"

“இது இன்டர்வெல்தான்… கிளைமாக்ஸ் இருக்கு!”- எடப்பாடிக்கு கெடுவைத்த உதயநிதி!!

"எடப்பாடி ஆட்சிக்கு இன்னும் 12 மாதங்கள்தான் இருக்கின்றன"

ஹைலைட்ஸ்

  • திமுக ஒருங்கிணைத்த வேலைவாய்ப்பு முகாமில் பேசியுள்ளார் உதயநிதி
  • அடிமை அதிமுக மக்களுக்காக எதுவும் செய்யாது: உதயநிதி
  • திமுகதான் மக்களுக்கான ஆட்சியைக் கொடுக்கும்: உதயநிதி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை, சைதாப்பேட்டையில் அக்கட்சி சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பணி நியமனம் பெற்றவர்களுக்கு அதற்குரிய ஆணையை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார். 

உதயநிதி, சிறப்புரையின்போது, “ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையை இன்று எதிர்க்கட்சியான திமுக செய்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்து தரவேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கிறது. ஆனால், இந்த அடிமை அரசிடமிருந்து எந்த நலத்திடங்களையும் எதிர்பார்க்க முடியாது. 

வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்குப் பதில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுகிறது இந்த அரசு. அமைச்சர் முதல் அனைவருக்கும் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்ததற்குத் தொடர்பு இருக்கிறது. இவர்கள் ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வர மாட்டார்கள். ஏனென்றால் இவர்களை மேலிருந்து ஆட்டிவைப்பது மோடி.

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தனர் மக்கள். அது ஒரு சினிமாவின் இன்டர்வெல்தான். அடுத்து 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல்தான், சினிமாவின் கிளைமாக்ஸ். அதில் ஜெயித்து வெற்றிக் கொடி நாட்டப் போவது திமுகதான். தேர்தலில் வெற்றி பெற்று நமது தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார். எடப்பாடி ஆட்சிக்கு இன்னும் 12 மாதங்கள்தான் இருக்கின்றன,” என்று அதிரடியாகப் பேசினார். 

.