Protest against Citizenship (Amendment) Act - நாடாளுமன்றத்தில் இரு நாட்களுக்கு முன்னர் நிறைவேறிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் இன்று ‘சட்ட நகல் கிழிக்கும்' போராட்டத்தில் ஈடுபட்டது தமிழக எதிர்க்கட்சியான திமுக. கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், போராட்டத்தை முன்னின்று நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரைப் போலீஸ் கைது செய்தது. அதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “இந்தப் போராட்டம் இத்தோடு ஓயப்போவதில்லை…” என்று பன்ச் கொடுத்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு மசோதாவைக் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மசோதா, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதால் மசோதா, சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை (5 ஆண்டுகள் இநியாவில் இருந்தால்) மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பிரதேசங்களின் பல்வேறு மாநிலங்களில் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து வன்முறைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் திமுக, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் சட்ட நகலைக் கிழித்ததற்காக கைது செய்யப்பட்ட உதயநிதி, “தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் சிறுபான்மையினருக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான வகையில் இருக்கிறது. அதை பாஜக தலைமையிலான மத்திய அரசு திரும்பப் பெற்றாக வேண்டும். அதுவரை இந்தப் போராட்டம் ஓயப் போவதில்லை. தொடரும்,” என்று பேசினார்.