This Article is From Feb 22, 2020

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு!!

டெல்லியில் பிரதமர் இல்லத்தை மோடியை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே.

New Delhi:

பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை அவரது டெல்லி இல்லத்தில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிகளுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி செய்துவரும் நிலையில் மோடியுடனான உத்தவின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக என்.ஆர்.சி., என்.பி.ஆர். தொடர்பாக சிவசேனாவும், அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. 

மோடி - உத்தவ் சந்திப்பு தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,'முதல்வர் உத்தவ் தாக்கரேவும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசுகின்றனர். இது சந்திப்பு மட்டுமே. அதற்கு மேல் எதுவும் கிடையாது. வாழ்க மகாராஷ்டிரா' என்று கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். தற்போது இந்த 3 கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. 

குறிப்பாக என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றில் 3 கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே சில நாட்களுக்கு முன்பாக கூறியிருந்தார். 

'குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவை வேறு மாதிரியானவை. என்.பி.ஆரும் மாறுபட்டது. குடியுரிமை சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் யாரும் அதனால் கவலைப்பட வேண்டாம்.

இப்போதைக்கு என்.ஆர்.சி. இல்லை. அதனை தற்போது நிறைவேற்ற மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது' என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

கூட்டணி ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் கூறுகையில், குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி., என்.பி.ஆ. குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவோம் என்றார். 

இதேபோன்று எல்கார் பரிஷத் வழக்கு மற்றும், கொரிகாவோன் - பிமா வன்முறைச் சம்பவங்களிலும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. 

.