This Article is From Dec 02, 2019

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது உத்தவ் தலைமையிலான சிவசேனா அரசு!!

பாஜக எம்.எல்.ஏக்கள் தேவேந்திர பட்னாவீஸ் தலைமையில் வெளி நடப்பு செய்தனர். கவர்னர் நியமித்த இடைக்கால சபாநாயகருக்கு பதிலாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வால்ஸ் பாட்டீல் சபாநாயகராக செயல்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறினர்.

சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே.

ஹைலைட்ஸ்

  • சிவசேனா அரசுக்கு 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
  • என்.சி.பி. உறுப்பினர் சபாநாயகராக செயல்பட்டதற்கு பாஜ எதிர்ப்பு தெரிவித்தது
  • நிரந்தர சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது
Mumbai:

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பெறுவதற்கு 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், உத்தவ் அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

பாஜக எம்.எல்.ஏக்கள் தேவேந்திர பட்னாவீஸ் தலைமையில் வெளி நடப்பு செய்தனர். கவர்னர் நியமித்த இடைக்கால சபாநாயகருக்கு பதிலாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வால்ஸ் பாட்டீல் சபாநாயகராக செயல்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறினர். 

மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இந்த கட்சிகளில் மொத்தம் 154 உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களைத் தவிர்த்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிலரும், பகுஜன் விகாஸ் அகாதி கட்சியும் உத்தவ் தாக்கரே அரசை ஆதரித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளது. 

காவி வண்ண தலைப்பாகையை இன்று உத்தவ் தாக்கரேவும், அவரது சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் உத்தவ் பேசுகையில், 'என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி. மகாராஷ்டிர மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய ஆசிர்வாதம் இல்லாமல் என்னால் பணியாற்ற முடியாது.' என்றார். 

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கவர்னர் நியமித்த இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்கருக்கு பதிலாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திலீப் வால்சே பாட்டீல் சபாநாயகராக செயல்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பாஜக எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவீஸ் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து பட்னாவீஸ் அளித்த பேட்டியில், 'கவர்னரால் நியமிக்கப்பட்ட சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை. இதுபோன்ற சம்பவம் வரலாற்றிலேயே நடந்தது கிடையாது?. எதற்காக சிவசேனா அரசு இப்படி செய்தது?. ஏன் இப்போது பயப்படுகிறார்கள்?' என்று கேள்வி எழுப்பினார். 

.