This Article is From Nov 25, 2019

“இன்றைய எட்டப்பன் எடப்பாடி..!”- நக்கலடிக்கும் டிடிவி தினகரன்

“ஆடிட்டர் குருமூர்த்தி, தற்போது கூறியுள்ள கருத்தை முன்னரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்"

“இன்றைய எட்டப்பன் எடப்பாடி..!”- நக்கலடிக்கும் டிடிவி தினகரன்

"தமிழக அமைச்சர்கள் பலர், அதிகார மமதையில் பல்வேறு கருத்துகளையும் வாய்க்கு வந்தவற்றையும் பேசி வருகிறார்கள்."

அமமுக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன், தமிழக முதல்வர் எபட்டாடி பழனிசாமி குறித்தும் தமிழக அமைச்சர்கள் குறித்தும் ஏளனம் செய்யும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடந்த அமமுக அமைப்புச் செயலாளர், ஹென்றி தாமஸின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தினகரன், “துரோகத்துக்கு பெயர் பெற்ற எடப்பாடி பழனிசாமி, துரோகத்தைப் பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கிறார். தமிழகத்தில் இருக்கும் 3 வயது குழந்தை முதல் 90 வயது மூதாட்டி வரை யாரைக் கேட்டாலும், துரோகத்திற்கு மறு பெயர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுவார்கள். அவர் தற்கால எட்டப்பன். 

தமிழக அமைச்சர்கள் பலர், அதிகார மமதையில் பல்வேறு கருத்துகளையும் வாய்க்கு வந்தவற்றையும் பேசி வருகிறார்கள். அவர்கள் பேச்செல்லாம் அதிகாரமும் ஆட்சியும் இருக்கும் வரைதான். இந்த ஆட்சி முடியும்போது அவர்கள், தங்களின் சுய புத்திக்கு வருவார்கள். அப்போது உண்மை ரூபம் வெளியே வரும்,” என்றார்.

தொடர்ந்து குருமூர்த்தி, ஓபிஎஸ் பற்றி தெரிவித்துள்ள சர்ச்சைக் கருத்து பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு தினகரன், “ஆடிட்டர் குருமூர்த்தி, தற்போது கூறியுள்ள கருத்தை முன்னரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், தன் அறிவுரையின் பேரில்தான் ஜெயலலிதாவின் சமாதியில் சென்று அமர்ந்து தியானம் செய்து, ‘தர்ம யுத்தத்தை' ஆரம்பித்தார் என்று பகிரங்கமாக கூறியவர். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்,” என்றார். 


 

.